பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்திய அணியை மழை வந்து காப்பாற்றுமா? என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.
இந்த நிலையில் நான்காம் நாள் மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டம் மீதம் உள்ளது. அப்போது மழை பெய்யுமா? வானிலை அறிக்கையில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது? என்பதைப் பற்றி பார்க்கலாம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் 13 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் அன்று ஆஸ்திரேலிய அணி விரைவாக ரன் குவித்தது.
மூன்றாவது நாள் அன்று மழைக்கு நடுவே தட்டுத் தடுமாறி ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்யத் துவங்கிய போதும் பலமுறை மழை குறுக்கிட்டது. இதன் இடையே இந்திய வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இந்த நிலையில், நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாகவே அமையும்.
நான்காம் நாள் ஆட்டத்தில் போட்டி நேரத்திற்கு முன்பு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. போட்டி நேரத்தின் போது 55 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனால், சில மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்படலாம்.
அடுத்து ஐந்தாவது மற்றும் கடைசி நாள் அன்று போட்டியின் இடையே சுமார் 2 மணி நேரம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் போட்டி பெரிய அளவில் தடை இன்றி நடக்க வாய்ப்பு உள்ளது.
கடைசி இரண்டு நாட்கள் ஆட்டத்தில் 196 ஓவர்கள் மீதமுள்ளன. இந்திய அணியின் பேட்டிங் பலவீனமாகவே காட்சி அளிப்பதால் இதில் 100 ஓவர்கள் வீசப்பட்டால் கூட இந்திய அணி இரண்டு இன்னிங்க்ஸிலும் ஆல் அவுட் ஆக வாய்ப்பு உள்ளது.