மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஒரு போட்டி எஞ்சிய நிலையில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது.

இந்த சூழலில் நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கான காரணத்தை தற்போது பார்க்கலாம். இந்த போட்டியில் இந்தியா வென்றதுக்கு முக்கிய காரணம் இன்றைய ஆடுகளம் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருந்தது. மேலும் தோய்வாக மாறியது.இதனை பயன்படுத்திக்கொண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர்.
இதைத்தான் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திலும் இந்திய அணி நிர்வாகம் எதிர்பார்த்தது. ஆனால் அது நமக்கு வேட்டாக அமைந்தது. இன்றைய ஆட்டத்தில் ரவி பிஸ்னாய் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். இதேபோன்று அக்சர் பட்டேல் நான்கு ஓவர்கள் வீசி 16 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதேபோன்று இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் வேகப்பந்துவீச்சாளர்கள் தான். கடந்த ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக தான் இருந்தார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் மூன்று வேக பந்துவீச்சாளர்களுமே கட்டுக்கோப்பாக பந்துகளை வீசி விக்கெட் எடுத்தனர். முகேஷ் குமார் 4 ஓவர்கள் 42 ரன்களும், தீபக்சாகர் நான்கு ஓவர்கள் 44 ரன்கள் இரண்டு விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் நான்கு ஓவர்கள் 33 ரன்கள் ஒரு விக்கெட்டும் என ஆறுதலாக இருந்தார்கள்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எளிதாக கையாண்டது. இதேபோன்று பேட்டிங் தொடக்கத்தில் ஆடுகளம் 200 ரன்களுக்கு மேல் அடிக்கக்கூடியதாக இல்லை என உணர்ந்து கொண்ட இந்திய வீரர்கள் அதற்கு ஏற்றார் போல் விளையாடத் தொடங்கினர். ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார்கள்.
இதன் மூலம் இந்திய அணி நல்ல இலக்கை எட்டியது. இதேபோன்று கீழ் வரிசையில் இணைந்த ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்கள். 29 பந்துகளில் 46 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 19 பந்துகளில் 35 ரன்கள் சேர்க்க இந்திய அணி நல்ல இலக்கை எட்டியது. மேலும் இந்தியாவின் பில்டிங்கும் இன்று நல்ல முன்னேற்றத்தை கண்டது. குறிப்பாக ஜெய்ஸ்வால் மட்டும் கேட்ச்களை விழுந்து விழுந்து பிடித்தார். மேலும் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரர்கள் பலரும் இல்லாததும் இந்தியாவுக்கு சாதகமாக மாறியது.