ராஞ்சி: மழையால் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நேற்றைய 4வது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது.
இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 4-வது ஒரு நாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் குவித்தது.

296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடத் தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். 4.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கனமழை கொட்டியது. இதனால் ஆட்டம் தடைபட்டது. சர்மா 9 ரன்களுடனும், தவான் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மழை தொடர்ந்து நீடித்ததால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. மழை ஓரளவு விட்டதும் ஆடுகளத்தின் மீது தேங்கியிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் மீண்டும் மழை பெய்ததால் ஆடுகளம் ஈரமாகிவிட்டது. இதனால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் உள்ளது. 5-வது போட்டி கட்டாக்கில் 26-ந் தேதி நடக்கிறது.