ராய்ப்பூர் : நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் சைமன் காடிச் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஸ்பின் பந்துவீச்சை ஆடவே தெரியவில்லை எனவும், கிளென் மேக்ஸ்வெல் அணியில் இல்லாததால் ஆஸ்திரேலியா 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது எனவும் கூறி இருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 3 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டியில் மட்டுமே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் மேக்ஸ்வெல் சதம் அடித்து தன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அந்தப் போட்டியிலும் மற்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.

நான்காவது டி20யில் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர் 2023 உலகக்கோப்பை தொடரை தொடர்ந்து டி20 தொடரில் ஆடி வந்த நிலையில், அவருக்கு ஓய்வு அளித்தது அணி நிர்வாகம். மேக்ஸ்வெல் இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய அணி நான்காவது போட்டியில் இந்தியா நிர்ணயித்த 175 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
குறிப்பாக, இந்திய அணியின் ஸ்பின்னர்கள் ரவி பிஷ்னோய் மற்றும் அக்சர் படேல் ஓவர்களை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். பிஷ்னோய் 4 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டும், அக்சர் படேல் 4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலிய வீரர்களின் பேட்டிங் சொதப்பல் குறித்து விமர்சனம் செய்த சைமன் காடிச், "ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. கிளென் மேக்ஸ்வெல் நான்காவது டி20 போட்டியில் இல்லாததால் தான் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்து இருக்கிறது." என்றார்.
மேலும், "இந்தப் போட்டியில் மட்டுமல்ல, இந்த தொடர் முழுவதுமே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் ஸ்பின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. அவர்கள் நேராக பந்து அடிப்பதை விட்டுவிட்டு, குறுக்கே அடிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள். அங்கே பந்து ஸ்பின் ஆகவே இல்லை. அதை ஆஸ்திரேலிய வீரர்கள் வேறு மாதிரி ஆடி இருக்கலாம்." என்றார் சைமன் காடிச்.