ராய்ப்பூர் : அதிரடி இந்திய பேட்ஸ்மேன் ரிங்கு சிங் நான்காவது டி20 போட்டியில் அவுட்டே இல்லை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அம்பயர்களை விமர்சனம் செய்து இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. ஆனாலும், இந்தப் போட்டியில் ரிங்கு சிங்கிற்கு எதிராக 20வது ஓவரில் நடந்த தவறை சுட்டிக் காட்டி இருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.

இந்தப் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்தியா பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் மூன்று விக்கெட்களை 8.1 ஓவரில் இழந்த நிலையில், ஒன்பதாவது ஓவரில் பேட்டிங் செய்ய வந்தார் ரிங்கு சிங்.
அவர் சிறப்பாக அதிரடி ஆட்டம் ஆடி 46 ரன்கள் சேர்த்து இருந்தார். கடைசி ஓவரில் அவர் சிக்ஸர்களை பறக்க விட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தப் போகிறார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தில் எல்பிடபுள்யூ என அம்பயாரால் ரிங்கு சிங்கிற்கு அவுட் கொடுக்கப்பட்டது.
அவர் ரிவ்யூ செய்த போது பந்து லெக் ஸ்டம்ப்பில் லேசாக படுவது தெரிந்தது. விதிப்படி லெக் ஸ்டம்ப்பில் பந்து பட்டால் எல்பிடபுள்யூ இல்லை. ஆனால், ரிவ்யூ கேட்கும் போது களத்தில் இருக்கும் அம்பயர் முதலில் எடுத்த முடிவே இறுதியானது என்பதால் அப்போது அவுட் கொடுக்கப்பட்டது.
இதை அடுத்து இந்த சம்பவம் குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, "ரிங்கு சிங்கிற்காகவே இந்த தொடர் நினைவில் வைத்துக் கொள்ளப்படும். பல இடங்களில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டும் அவர் எல்லாவிதத்திலும் தன்னை நிரூபித்து இருக்கிறார். அவர் எந்த இடத்திலும் பேட்டிங் செய்வார். அவர் கடைசி வரை நின்று பேட்டிங் செய்தார். ஆனால், 20வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் அவுட்டே இல்லை. அம்பயர் அவருக்கு அவுட்டே கொடுத்திருக்கக் கூடாது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பேட்ஸ்மேனுக்கு சாதகமான முடிவைத் தான் எடுக்க வேண்டும். அம்பயருக்கு சாதகமான முடிவை எடுக்கக் கூடாது" என்றார்.