ராய்ப்பூர் : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் குவித்தும் மேக்ஸ்வெலின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.

இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் அடித்து வருகிறது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் 200 ரன்கள் அடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் இரண்டு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரும் உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயரும் இன்றைய ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் திரும்புகிறார்.
இதனால் அவருக்கு பதிலாக யார் அணியில் இடம் கொடுக்கப் போகிறார் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ஸ்ரேயாஸ், நடு வரிசையில் விளையாடப் போகிறார்.இதனால் தற்போது திலக் வர்மா தான் ஸ்ரேயாஸ்க்கு இடம் வழங்கப் போகிறார் என தெரிகிறது. இதேபோன்று இந்தியா அணிக்கு சிஎஸ்கே வின் ஆல்ரவுண்டர் தீபக் சாஹர் திரும்பி இருக்கிறார். தீபக் சாகர் சிறப்பாக விளையாடக்கூடிய வீரராக இருக்கிறார்.
மேலும் பேட்டிங்கும் அவருக்கு நன்றாக வரும் என்பதால் இந்தியாவின் பேட்டிங் பலம் கூடி இருக்கிறது. இந்த நிலையில் கடந்த டி20 போட்டியில் மிகவும் மோசமாக செயல்பட்ட பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு தீபக்சாகர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் ஆர்ஸ்தீப் சிங் அல்லது ஆவேஸ் கான் இரண்டு பேரில் எவரேனும் ஒருவர் நீக்கப்பட்டு முகேஷ் குமார் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுபோன்று ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ் போன்ற வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளதால் ஆஸ்திரேலிய அணியும் இளம் வீரர்கள் கொண்ட அணியை தான் வைத்து விளையாடுகிறது.