கோல்ட் கோஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி மழையால் ரத்தான நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியும் வென்றது.
இந்த நிலையில் தொடரில் முன்னிலை பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இரு அணிகளும் கோல்ட் கொஸ்ட்டில் நடைபெற்ற நிலையில், நான்காவது டி20 போட்டியில் பலப் பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா, கில் ஆகியோர் நிதானமாக விளையாடி ஒரு கட்டத்தில் அபிஷேக் ஷர்மா அதிரடி காட்ட மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 21 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 6.4 ஓவரில் 56 ரன்கள் எடுத்திருந்தது.
யாருமே எதிர்பார்க்காத வகையில் சிவம் துபே மூன்றாவது வீரராக விளையாடி 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இதே போன்று கேப்டன் சூரியகுமார் யாதவ், அடம் ஜாம்பா ஓவரின் இரண்டு சிக்சர் அடித்து பட்டையை கிளப்பினார். எனினும் அவர் பத்து பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
இறுதியில் அக்சர் பட்டேல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 11 பந்துகளில் 21 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சு தரப்பில் ஆடம் ஜாம்பா மற்றும் நாதன் எலீஸ் ஆகியோர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.
இதை அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மிட்செல் மார்ஸ் மற்றும் மேத்தீவ் ஷார்ட் ஆகியோர் வழக்கம் போல் அதிரடி காட்டினர். இதில் மேத்தீவ் ஷாட் 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் இங்கிலீஷ் 12 ரன்களில் ஆட்டம் இழக்க மிட்செல் மார்ஸ் 24 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அதிரடி வீரர் டிம் டேவிட் 14 ரன்களிலும், ஜோஸ் பிலிப் 10 ரன்களிலும் ,மார்க்கஸ் ஸ்டோனிஸ் 17 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய மேக்ஸ்வெல் இரண்டு ரன்களில் வெளியேறினார். இதேபோன்று பென் டவார்ஷிஸ் ஐந்து ரன்கள் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலிய அணி 119 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய பந்து வீச்சு தரப்பில் வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகளையும், கில், அக்சர் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 168 ரன்கள் என்ற இலக்கை இந்திய வீரர்கள் சிறப்பாக தற்காத்து ஆஸ்திரேலியாவின் கதையை முடித்திருக்கிறார்கள். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா இரண்டுக்கு ஒன்று என்று கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது. இரு அணிக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.