மும்பை: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி வியாழக்கிழமை நாளை நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், தொடரில் முன்னிலை பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஆட்டம் நாளை நடக்கின்றது.
இந்த போட்டிக்கு முன்பு இரு அணிகளிலிருந்து முக்கிய வீரர்கள் சிலர் வெளியேறி இருப்பது ரசிகர்கள் இடையே விரக்தியை ஏற்படுத்திருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட், ஆசஸ் தொடரில் பங்கேற்பதற்காக விலகி விட்டார்.

இதைப் போன்று இந்திய அணியில் தென்னாப்பிரிக்க தொடருக்கு தயாராக குல்தீப் யாதவ் அணியை விட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றம் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது t20 போட்டியில் இந்திய அணி மூன்று மாற்றங்களை செய்தது.
சஞ்சு சாம்சன் பதில், ஜித்தேஷ் சர்மா களமிறங்கி சிறப்பாக செயல்பட்டார். அதே போன்று ஹர்ஷித் ராணாவுக்கு பதில் விளையாடிய ஆர்ஸ்தீப் சிங் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதைப் போன்று குல்தீப் பதில் வாஷிங்டன் சுந்தரும் பேட்டிங்கில் 49 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த நிலையில் நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி இதே பிளேயிங் லெவனை பயன்படுத்துமா? இல்லை ஏதேனும் ஒரு மாற்றத்தை செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தத் தொடரில் வீரர்கள் பலரும் விளையாடிய நிலையில் ரிங்கு சிங் மட்டும் இன்னும் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை. இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. கில்லுக்கு ஓய்வு அளித்துவிட்டு சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக கொண்டு வரவும் ரிங்கு சிங்கை நடு வரிசையில் பயன்படுத்தவும் கம்பீர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. ஆனால் கில்லுக்கு ஓய்வு வழங்கும் முடிவை எடுக்க மாட்டார் என்றும் தொடர்ந்து கில், அபிஷேக் ஷர்மா ஜோடியே விளையாடும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.