கோல்ட் கோஸ்ட் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இடம் தராதது ரசிகர்களை கோபமடைய வைத்திருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் நான்காவது டி20 போட்டி கோல்ட் கோஸ்டில் நடைபெறுகிறது.
இந்த மைதானத்தில் இந்திய அணி முதல் டி20 போட்டியில் விளையாடுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மார்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாங்களும் இங்கு அதிகமாக விளையாடியது கிடையாது.

ஆனால் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்பதை இங்கே இருந்தவர்களிடம் தெரிந்து கொண்டோம். கடைசி இரண்டு போட்டிகள் மட்டும் தான் எஞ்சி இருக்கிறது. இன்னும் தொடர் முடிவாகவில்லை. இதனால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக முயற்சி செய்யும்.
எங்கள் அணியில் இன்று நான்கு வீரர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். அடம் ஜாம்பா, மேக்ஸ்வெல், பில்லீப்பி, பென் டிவர்சஸ் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள் என்று மிட்செல் மார்ஷ் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், ஆடுகளம் பார்ப்பதற்கு இந்தியாவில் இருப்பது போல் இருக்கிறது.
இதனால் போட்டி போக போக ஆடுகளம் தோய்வாக மாறும். இதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்வது எங்களுக்கு மகிழ்ச்சி தான். நாங்கள் பெரிய ரன்களை அடித்து ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவால்களை கொடுப்போம். இது போன்ற இருதரப்பு தொடரில் விளையாடுவதன் மூலம் நாம் நமக்குள்ளேயே சவால்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த மைதானத்தில் நாங்கள் முதன்முறையாக விளையாடுகின்றோம். நேற்று கூட இங்கு வந்து நன்றாக பயிற்சி செய்தோம்.இந்த சவாலை நாங்கள் எடுத்துக் கொண்டு நிச்சயமாக நன்றாக விளையாடுவோம். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இன்று செய்யப்படவில்லை என சூரிய குமார் தெரிவித்துள்ளார். கில் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கம்பீர் அணியில் எந்தவித மாற்றத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.