ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியிலும் இந்திய அணி பேட்டிங் வரிசையில் அடிக்கடி மாற்றம் செய்தது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில், முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது.
இந்த நிலையில் நான்காவது டி20 போட்டி கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா மற்றும் கில் ஆகியோர் பொறுமையுடன் விளையாடினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 6.4 ஓவரில் 56 ரன்கள் எடுத்து இருந்தது. மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் உடன் அபிஷேக் ஷர்மா 21 பந்தில் 28 ரன்கள் எடுத்தார். இதை அடுத்து யாருமே எதிர்பாராத வகையில் மூன்றாவது வீரராக சிவம் துபே களம் இறங்கினார்.
இது தேவையில்லாத ஆணியாக பார்க்கப்படுகிறது. 18 பந்துகளை எதிர்கொண்ட அவர் 22 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். அணியின் ஸ்கோர் மிகவும் குறைவாக இருந்ததால் சூரியகுமார் யாதவும் அதிரடியாக ஆட முற்பட்டார். ஆடம் ஜாம்பா வீசிய ஒரே ஓவரில் சூரியகுமார் இரண்டு சிக்ஸர்களை அடித்தார்.
எனினும் அவர் பத்து பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பொறுமையாக விளையாடிய கில் 39 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 117 என்ற அளவில் இருந்தது. இதனால் நடுவரிசையில் விளையாடிய திலக் வர்மா ஐந்து ரன்களிலும், ஜிதேஷ் சர்மா மூன்று ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
கடந்த போட்டியில் 49 ரன்கள் விளாசிய வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில் ஏழு பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரில் அக்சர் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.கம்பீர் தேவையில்லாமல் வீரர்களின் இடங்களை மாற்றுவதால் யார் எப்படி விளையாட வேண்டும் என்பதையே வீரர்கள் மறந்து விடுகிறார்கள். இதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.