மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது.
அப்போது இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை எதுவும் அணிந்து இருக்கவில்லை. இந்த நிலையில் இரண்டாவது நாள் அன்று கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர், அதற்கு என்ன காரணம் என பலருக்கு தெரியாமல் இருக்கலாம். முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு மறைந்தார். அவரது நினைவாகவே இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டையை அணிந்து விளையாடி வருகின்றனர்.

2004 முதல் 2014 வரையிலான பத்து ஆண்டுகளுக்கு இந்திய நாட்டின் பிரதமராக இருந்தார் மன்மோகன் சிங். அவரது உடல் நிலை சில மாதங்களாகவே மோசமாக இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.
இதை அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட்டை கட்டுப்படுத்தி வரும் பிசிசிஐ அமைப்பு கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தது.
அதே காலகட்டத்தில் தான் இந்திய அணி இரண்டு உலகக் கோப்பைகளையும், ஒரு சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையையும் வென்றது குறிப்பிடத்தக்கது. 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி எனும் மூன்று ஐசிசி கோப்பைகளை இந்திய அணி வென்று இருந்தது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த அதே காலகட்டத்தில் தான் ஐபிஎல் என்ற டி20 தொடர் உருவாக்கப்பட்டு, அது இன்று உலகின் மிக முக்கியமான விளையாட்டு தொடராக மாறி இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியால் பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தின் முதல் பகுதியிலும் ஆஸ்திரேலிய அணி விரைவாக ரன் சேர்த்தது.