மெல்போர்ன்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வலைப் பயிற்சியில் பேட்டிங் பயிற்சி செய்து கொண்டு இருந்த போது அவரது காலில் பந்து தாக்கியதால் வலி ஏற்பட்டது. அவர் வலியில் துடித்தார். பிசியோதெரபிஸ்ட் அவருக்கு சிகிச்சை அளித்தார். இதை அடுத்து நான்காவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு போட்டிகளில் விளையாடி சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதற்கு முன் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித் சர்மா 6 இன்னிங்ஸ்களில் 91 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.

ரோஹித் சர்மா மோசமான ஃபார்மில் இருப்பதால் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். எப்போதும் அதிரடியாக ஆடுவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளும் வழக்கம் கொண்ட ரோஹித் சர்மா, இந்த முறை முற்றிலுமாக மாறுபட்டு பந்தை தடுத்து ஆடுவதற்கான பயிற்சிகளை அதிகமாக மேற்கொண்டார்.
இந்த நிலையில் பயிற்சியின் போது ரோஹித்தின் முழங்காலில் பந்து தாக்கியது. முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரோஹித் தொடர்ந்து விளையாட முயன்றார். ஆனால், சில நிமிடங்களில் அவருக்கு வலி அதிகரித்ததை அடுத்து அவர் பிசியோதெரபிஸ்ட்டை அழைத்தார். அவருக்கு முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தால் ரோஹித் சர்மா நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிதாக இல்லாத பட்சத்தில் இன்னும் நான்கு நாட்கள் கழித்து துவங்க உள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன் அவர் தயாராகி விடுவார். ஒருவேளை ரோஹித் சர்மாவால் விளையாட முடியாமல் போனால் சர்ஃபராஸ் கான் அவருக்கு பதிலாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.
நேற்று வலைப் பயிற்சியில் கே எல் ராகுலுக்கு விரலில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இந்திய அணியில் ராகுல் மட்டுமே இதுவரை சிறப்பாக ரன் சேர்த்து இருக்கிறார். எனவே, அவர் விரைவில் குணமாகி போட்டியில் விளையாட தயாராக வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.