மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. மூன்றாவது போட்டி மட்டும் டிராவில் முடிந்தது. இந்த நிலையில், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.

அப்போது தான் இந்த தொடரை கைப்பற்ற முடியும். மேலும், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். இந்த நிலையில், மெல்போர்னில் துவங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்து உள்ளது. மேலும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்து இந்திய அணிக்கு முதல் அடியை கொடுத்து இருக்கிறார்.
பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்வது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் சேஸிங் செய்வது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். அந்த வகையில் முதலில் பேட்டிங் செய்யும் அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் முதலில் பேட்டிங் செய்யும் என்பதால் அது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சுப்மன் கில்லுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.இதன் மூலம் இந்திய அணி பேட்டிங்கை விட பவுலிங் முக்கியம் என்ற முடிவை எடுத்து உள்ளது. அதே சமயம், சுந்தர் ஆல் ரவுண்டர் என்பதால் பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியா அணியின் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே எல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.