மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்து பாதி தொடரில் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக மாற்று சுழற் பந்துவீச்சாளராக தனுஷ் கோட்டியான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால், முன்னணி சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை ஏன் மாற்று வீரராக தேர்வு செய்யவில்லை? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு அடுத்து மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக இருந்தார் குல்தீப் யாதவ். அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் அதிக வாய்ப்பு கிடைத்து வந்ததால் குல்தீப் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில், அஸ்வின் ஓய்வு பெற்றதை அடுத்து குல்தீப் யாதவ் இந்திய டெஸ்ட் அணியில் இனி நிரந்தரமாக வாய்ப்பு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவரை விட்டுவிட்டு தனுஷ் கோட்டியான் என்ற இளம் பந்துவீச்சாளரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்து இருக்கிறது.
இது குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் விசாரித்த போது, குல்தீப் யாதவ் காயத்தில் இருந்து இன்னும் விடுபடவில்லை என கூறப்பட்டது. அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அறுவை சிகிச்சைக்காக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சை முடிந்த நிலையிலும் அவர் ஓய்வு எடுத்து வருவதாகவும், இன்னும் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு உடற்திறனை பெறவில்லை எனவும் கூறப்படுகிறது. குல்தீப் யாதவ் இல்லையெனில் அக்சர் பட்டேலை தேர்வு செய்து இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர் சமீபத்தில் விஜய் ஹசாரே ட்ராபி தொடரில் இருந்து தற்காலிகமாக விடுப்பு எடுத்துக் கொண்டு இருந்தார்.
அதனால், அவர்கள் இருவரையும் விட்டுவிட்டு மாற்று சுழற் பந்துவீச்சாளராக தனுஷ் கோட்டியானை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்து இருக்கிறது. அவர் பேட்டிங்கிலும் கை கொடுப்பார் என்பதாலேயே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 2024 ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணி கோப்பை வென்றதில் தனுஷின் பங்கு மிகவும் அதிகம். அந்த தொடரில் ஆல் ரவுண்டராக அவர் சிறப்பாக செயல்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.