பெங்களூர் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க உதவினார் அக்சர் பட்டேல்.
ஐந்து விக்கெட் வீழ்ந்த நிலையில், ஒரு பக்கம் ஸ்ரேயாஸ் ஐயர் நின்றாலும், மறுபக்கம் ஒத்துழைத்து ஆட யாரும் இருக்க மாட்டார்கள் என எண்ணிய போது ஆல் - ரவுண்டரான அக்சர் பட்டேல் பொறுப்பான ஆட்டம் ஆடினார்.

97 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தி விட்ட ஆஸ்திரேலியா, இந்திய அணியை 120 - 130 ரன்களுக்குள் சுருட்டலாம் என கனவு கண்டது. ஆனால், அக்சர் பட்டேல் ஆடிய ஆட்டத்தால் நிலைமை மாறியது. ஆஸ்திரேலியா கனவு நிறைவேறாமல் போனது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்த இந்த போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அங்கு மழை சாரல் பெய்த பின் போட்டி நடந்ததால் பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதனால், இந்திய அணி துவக்கம் முதல் விக்கெட்டை இழந்து வந்தது.
ஜெய்ஸ்வால் 21, ருதுராஜ் 10, சூர்யகுமார் யாதவ் 5, ரிங்கு சிங் 6, ஜிதேஷ் சர்மா 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 97 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. ஐந்து பேட்ஸ்மேன்கள் வெளியேறிய நிலையில் களத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார். அவருடன் கூட்டணி சேர்ந்தார் அக்சர் பட்டேல்.
14வது ஓவரில் கூட்டணி சேர்ந்த அவர் 21 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். இரண்டு ஃபோர், ஒரு சிக்ஸ் மட்டுமே அடித்தார். மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 57 ரன்கள் சேர்க்க இந்தியா 20 ஓவர்களில் 160 ரன்கள் சேர்த்தது.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி ஒரு பக்கம் விக்கெட்களை இழந்தாலும் மெக்டேர்மாட் அடித்த அரை சதத்தால் வெற்றிக்கு அருகே சென்றார். ஆனால், அதன் பின் வரிசையாக விக்கெட்களை சாய்த்து கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 10 ரன் தேவை என்ற நிலைக்கு போட்டி சென்றது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீச இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்சர் பட்டேல் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.