பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனும் தொடக்க வீரருமான சுப்மன் கில், அதிரடியாக விளையாடி தன்னை விமர்சித்த முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷுக்குப் பதிலடி கொடுத்தார். இந்தப் போட்டிக்கு முன்னதாக, சுப்மன் கில்லைச் சடகோபன் ரமேஷ் 'டேபிள் ஃபேன்' போல மெதுவாக ஆடுவதாக விமர்சித்திருந்தார். அதற்குப் பதிலடி அளித்த சுப்மன் கில், ஒரே ஓவரில் நான்கு பவுண்டரிகளை அடித்து மிரட்டினார். என்ன நடந்தது?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு வரை சஞ்சு சாம்சன் இந்திய டி20 அணியின் தொடக்க வீரராகச் சிறப்பாக விளையாடியிருந்தார். மூன்று சதங்களை அடித்து மிரட்டி இருந்தார். அவர் நிரந்தரமாக இந்திய டி20 அணியின் தொடக்க வீரராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், ஆஸ்திரேலிய டி20 தொடரில் சுப்மன் கில் இந்திய அணியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதோடு, சஞ்சு சாம்சனின் தொடக்க வீரர் என்ற இடத்தையும் எடுத்துக் கொண்டார். அதனால் சஞ்சு சாம்சன் தனது இடத்தை இழந்தார். இது ஒருபுறம் இருக்க, சுப்மன் கில் டி20 போட்டிகளிலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
சஞ்சு சாம்சன் இடத்தையும் எடுத்துக் கொண்டு, அதிக ரன் குவிக்கவும் தவறினார் சுப்மன் கில். முதல் மூன்று போட்டிகளில் அவர் பெரிதாக ரன் குவிக்காதது மிகப்பெரிய விமர்சனமாக மாறியது. இந்த நிலையில், நான்காவது டி20 போட்டியில் சுப்மன் கில் 39 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அவர் ஓரளவு ரன் சேர்த்தாலும், நிதானமாக ஆடியது விமர்சனத்துக்கு உள்ளானது.
இதுபற்றிப் பேசியிருந்த சடகோபன் ரமேஷ், இந்திய டி20 அணியில் அபிஷேக் சர்மா புயலாக அதிரடி ஆட்டத்தை ஆடுவதாகவும், அவருடன் தொடக்க வீரராக இறங்கும் சுப்மன் கில் 'டேபிள் பேனை'ப் போல நிதானமாகச் சுற்றுவதாகவும் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது சுப்மன் கில் அதிரடியைக் காட்டினார். இந்தப் போட்டியில் 4.5 ஓவர்கள் வீசப்பட்டபோது மழை குறுக்கிட்டு ஆட்டம் நின்றது. அப்போது வரை சுப்மன் கில் 16 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் 6 பவுண்டரிகளை அடித்திருந்தார்.
அதிலும், பென் டுவார்ஷூயிஸ் வீசிய மூன்றாவது ஓவரில் மட்டும் நான்கு பவுண்டரிகளை அடித்து மிரட்டினார். அதில் மூன்று பவுண்டரிகளை வரிசையாக அடித்து அசத்தியிருந்தார். அந்த ஓவரில் மட்டும் இந்திய அணி 16 ரன்களைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் சர்மா 4.5 ஓவர்கள் முடிவில் 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார். அவர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் மட்டுமே அடித்து இருந்தார். அந்த வகையில், அபிஷேக் சர்மாவை விடச் சிறிதளவு விரைவாக ரன் சேர்த்திருந்தார் சுப்மன் கில். கில்லின் ஸ்ட்ரைக் ரேட் 181 என்பதாக இருந்தது. இதன் மூலம் சடகோபன் ரமேஷின் விமர்சனத்திற்கும் அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.