9 முறை.. இந்திய பேட்டிங்கின் போது மழையால் நின்ற ஆட்டம்.. அசராமல் நிதானம் காத்த கேஎல் ராகுல், ஜடேஜா!
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது மழை காரணமாக மட்டும் 9 முறை ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் கவனத்தை சிதறவிடாமல் இந்திய அணியின் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி காபாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக 13.2 ஓவர்களுடன் நிறுத்தப்பட்டது. இதன்பின் 2வது நாளில் ஆஸ்திரேலியா அணி அதிரடியாக பேட்டிங் ஆடிய நிலையில், முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது.

இதன்பின் இந்திய அணி 3வது நாள் இறுதியில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் 4வது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க வேண்டும் என்பதே முதன்மை நோக்கமாக இருந்தது. அதற்கேற்க கேஎல் ராகுல் பிடிவாதமாக களத்தில் நின்று மிகச்சிறந்த அரைசதத்தை பதிவு செய்தார்.
அவருடன் ரவீந்திர ஜடேஜாவும் அசத்தலாக விளையாடிய நிலையில், அவ்வப்போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் மிட்சல் மார்ஷ் நடுவர்களிடம் ஒரேயொரு ஓவரை வீச அனுமதிக்க வேண்டும் என்று கெஞ்சினார். ஆனால் அதற்குள் மழை அதிகரித்ததால், வீரர்கள் ஓய்வறைக்கு திரும்பினர்.
இறுதியாக 4வது நாள் முடிவில் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்ததோடு, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்களை குவித்துள்ளது. இன்னும் 194 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில், கடைசி நாளில் இந்திய அணி பேட்டிங்கை தொடரவுள்ளது. இந்த நிலையில் காபா டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக மட்டும் 9 முறை ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அதிகபட்சமாக கேஎல் ராகுல் பேட்டிங் ஆடிய போது தான் மழையால் 4 முறை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கொஞ்சம் கூட கவனம் சிதறாமல் 139 பந்துகளில் 84 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். ஏனென்றால் மழை குறுக்கிடும் போது பேட்ஸ்மேன்களின் கவனம் சிதறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக கேஎல் ராகுலை இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications