ராய்பூர் : இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி விளாசி இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்று ஆடி வருகிறது. அந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வென்ற நிலையில், மூன்றாவது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அந்தப் போட்டியில் நடந்த கேப்டன் சூர்யகுமார் எடுத்த மோசமான முடிவுகளை சுட்டிக் காட்டி ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்து இருக்கிறார். அந்தப் போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது பிரசித் கிருஷ்ணா தான். ஆனால், அவர் தான் ஆஸ்திரேலிய அணியின் சேஸிங்கின் போது 18 மற்றும் 20வது ஓவரை வீசினார். அதே போல, 19வது ஓவரை ஸ்பின்னரான அக்சர் பட்டேல் வீசினார்.

அக்சர் பட்டேல் சிறப்பாக பந்து வீசிய நிலையில் அவரது ஓவர்களை முன்பே பயன்படுத்தாமல் ஏன் 19வது ஓவர் வரை அவருக்கு ஓவர் கொடுக்காமல் இருக்க வேண்டும்? கடைசி 2 ஓவர்களில் ஸ்பின்னர்கள் பந்து வீசினால் ஆஸ்திரேலியா எளிதாக ரன் குவிக்கும் என்பதை கணித்து ஆறாவது பந்துவீச்சாளரை பயன்படுத்தி இருக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார்.
இது பற்றி பேசுகையில், "அக்சர் பட்டேல் 19வது ஓவரை வீசி இருக்கிறார். பிரசித் கிருஷ்ணா ரன்களை வாரி வழங்கிய போதும் 18 மற்றும் 20வது ஓவரை வீசி இருக்கிறார். இந்தியா இன்னும் ஆறாவது பந்துவீச்சாளரை பயன்படுத்தாமல் இருக்கிறது. பிரசித் கிருஷ்ணா 68 ரன்கள் கொடுத்த போதும் அவரைத் தான் பந்துவீச அழைத்து இருக்கிறீர்கள். ஆறாவது பந்துவீச்சாளரை நீங்கள் பயன்படுத்தவே இல்லை." என்றார் ஆகாஷ் சோப்ரா.
மேலும், "அக்சர் பட்டேல் சிறப்பாக பந்து வீசி இருந்தார். ஆனால், அவரை 19வது ஓவர் வரை பயன்படுத்தாமல் தக்க வைத்து இருக்கிறீர்கள். அவரை ஏன் கடைசி ஓவர் வரை தக்க வைத்தார் என்பது எனக்கு புரியவில்லை. உங்கள் கணிப்பில் பெரிய தவறு இருக்கிறது. அதனால் தான் நீங்கள் ஆறாவது பந்துவீச்சாளரை பயன்படுத்தவில்லை. அதனால் தான் 19வது ஓவரை ஒரு ஸ்பின்னர் வீசி இருக்கிறார். அதனால் தான் 18, 20வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசி அதிக ரன்களை கொடுத்தார்." என சூர்யகுமார் யாதவை விளாசி இருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.