மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தொடக்க வீரராக களமிறங்கிய கில் 10 பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதேபோன்று மூன்றாவது வீரராக இன்று வாய்ப்பு கிடைத்த சஞ்சு சாம்சன் 4 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு ரன்களிலும் கேப்டன் சூரியகுமார் யாதவ் 4 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன்னிலும் ஆட்டமிருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா டக் அவுட் ஆக அக்சர் பட்டேல் 7 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 49 ரன்களுக்கு ஐந்து விக்கட்டுகள் இருந்து தடுமாறியது. இந்த நிலையில் மறுமுனையில் தனி ஆளாக போராடிய அபிஷேக் ஷர்மா வழக்கம் போல் பவுண்டரி, சிக்ஸர் என அடித்தார். இதனால் 23 பந்துகளில் அபிஷேக் ஷர்மா அரை சதம் கடந்தார். அவருக்கு ஜோடியாக களமிறங்கிய ஹர்ஷித் ரானா 33 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார்.
இதில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். அபிஷேக்சர்மா 37 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் கடைசி சில ஓவர்களில் களம் இறங்கி சிவம் துபே, ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் இரண்டு பந்துகளை எதிர்கொண்டு நான்கு ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதேபோன்று குல்திப் யாதவ், பும்ரா அடுத்தடுத்து டக் அவுட்டாக இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஹேசல்வுட் மூன்று விக்கெட்டுகளையும் சேவியர் மற்றும் நாதன் எல்லீஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.