மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஏ மற்றும் இந்தியா ஏ அணிகள் இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இந்திய டெஸ்ட் அணியில் மாற்று துவக்க வீரராக இடம் பெற்று இருக்கும் அபிமன்யு ஈஸ்வரன் இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பி இருக்கிறார்.
முதல் போட்டியிலும் அவர் சரியாக ரன் குவிக்காத நிலையில் இரண்டாவது போட்டியிலாவது ரன் சேர்த்து இந்திய அணியில் தன்னை தேர்வு செய்ததற்கு நியாயம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக முதல் இன்னிங்க்ஸில் மூன்று பந்துகளை மட்டும் சந்தித்து டக் அவுட் ஆகி இருந்தார்.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 17 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். இதை எடுத்து அவர் மீது ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இதில் முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மாற்றுத் துவக்க வீரராக வேறு ஒருவர் ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில் தான் அபிமன்யு ஈஸ்வரன் இந்திய டெஸ்ட் அணியில் முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
அதேசமயம் கே எல் ராகுல் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் நேரடியாக இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டு ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்கப்பட்டார். அவர் துவக்க வீரராகவே இந்தப் போட்டியில் ஆடினார். அதன் மூலம், கே எல் ராகுலும் மாற்று துவக்க வீரருக்கான இடத்துக்கான பரிசோதனையில் இருந்தார்.
இந்த நிலையில், கே எல் ராகுலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்க்ஸிலும் சரியாக ரன் சேர்க்கவில்லை. 4 மற்றும் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனவே இந்திய அணி தற்போது ரோஹித் சர்மாக்கு பதிலாக யாரை மாற்ற துவக்க வீரராக ஆடவைப்பது என்ற குழப்ப நிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வாலுடன் துவக்க வீரராக களம் இறங்கப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.