சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த போதும், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.
கடந்த முறை 36 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டான போதும், அடுத்தடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டிலும் வென்று மறக்க முடியாத கம்பேக்கை நிகழ்த்தியது. அதேபோல் இந்தியா வந்த போதும் ஆஸ்திரேலியா அணியால் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால், ஆஸ்திரேலிய அணியில் உள்ள வீரர்கள் பலரும் இந்திய அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியதே கிடையாது.

இதனால் பார்டர் - கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுறுத்த தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் பேசுகையில், இந்த டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் கடினமாக இருக்க போகிறது. சொந்த மண்ணில் வலிமையான அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆஸ்திரேலியா அணிக்கு உள்ளது.
அதேபோல் வெளிநாடுகளில் எப்படி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்று இந்திய அணிக்கு நன்றாக தெரியும். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் சர்வதேச அளவில் யாருடனும் போட்டியிட்டு வெல்லக் கூடியவர்கள். நிச்சயம் அவர்கள் ஆஸ்திரேலியா மண்ணில் மிகச்சிறப்பாக செயல்படுவார்கள்.
அதேபோல் இந்திய அணியில் டெக்னிக்கலாக ஏராளமான சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். இதனால் நிச்சயம் கடினமான தொடராக இருக்கும். நிச்சயம் எனது ஆதரவு ஆஸ்திரேலியா அணிக்கு தான். ஆனால் ஒயிட் வாஷ் போன்ற விஷயங்கள் நடக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். நிச்சயம் ஏராளமான நெருக்கடிகள் இரு அணிகளாலும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், பார்டர் கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும் என்று கணிப்பை வெளியிட்டிருந்தார். ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள் வார்த்தை விளையாட்டுகளை தொடங்கியிருப்பது இந்திய அணி மீதான அழுத்தத்தை அதிகரித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.