அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, தொடரை இழக்காமல் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த வாழ்வா சாவா ஆட்டத்தில், இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஒரு பிரம்மாண்டமான சாதனை காத்திருக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததே இல்லை என்ற பெருமைமிக்க சாதனைதான் அது.
பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா (8), விராட் கோலி (0) ஆகியோரின் சொதப்பலால் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
எனவே, தொடரில் நீடிக்க வேண்டுமானால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற பெரும் நெருக்கடியில் இந்திய அணி உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்திய அணிக்கு அடிலெய்டு ஓவல் மைதானத்தின் புள்ளிவிவரங்கள் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.

அடிலெய்டு ஓவல் மைதானம் இந்திய அணிக்கு மிகவும் ராசியான ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக 2008ஆம் ஆண்டிலிருந்து இங்கு நடைபெற்ற எந்த ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோற்றதில்லை.
17 வருட வெற்றிப் பயணம்: கடைசியாக 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. அதன்பிறகு, இங்கு ஆடிய 5 போட்டிகளிலும் இந்தியா தோல்வியைச் சந்திக்கவில்லை.
சேஸிங்கில் கிங்: அடிலெய்டில் கடைசியாக ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கில் இந்திய அணி சேஸிங் செய்துள்ளது. அந்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடிலெய்டு மைதானம் என்றாலே விராட் கோலியின் ஆதிக்கம்தான் நினைவுக்கு வரும். இந்த மைதானம் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் 4 ஆட்டங்களில் 2 சதங்கள் உட்பட 244 ரன்களை 61 என்ற சராசரியில் அடித்துள்ளார் கோலி. அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து இங்கு 12 ஆட்டங்களில் 5 சதங்களுடன் 975 ரன்கள் குவித்துள்ளார்.
முதல் போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த கோலி, தனது கோட்டையான அடிலெய்டில் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ள மூத்த வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் முதல் போட்டியில் சோபிக்காதது அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு இது முதல் ஒருநாள் தொடராகும். முதல் போட்டியின் தோல்வியிலிருந்து மீண்டு, தனது தலைமையில் முதல் வெற்றியைப் பதிவு செய்ய அவர் முனைப்பு காட்டுவார்.
வானிலையைப் பொறுத்தவரை, அடிலெய்டில் இன்று வானம் தெளிவாக இருக்கும் என்றும், மழைக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு முழுமையான போட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 17 ஆண்டுகால வெற்றிச் சாதனையைத் தக்கவைத்து, தொடரை 1-1 என சமன் செய்யுமா இந்திய அணி? கோலியின் பேட் மீண்டும் கர்ஜிக்குமா?