இதுதான் கர்மா.. அஸ்வினுக்கு அடித்த லக்.. அவுட் ஆகாமல் வெளியேறிய மிட்செல் மார்ஷ்.. என்ன நடந்தது?
அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் மிட்செல் மார்ஷ் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்துவதற்கு "கர்மா" உதவி செய்தது பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் தங்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் மட்டும் எடுத்தது.
அடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்தது. அப்போது மார்னஸ் லாபுஷேன் அரை சதம் அடித்து ஆட்டமிழந்த பின் மிட்செல் மார்ஷ் பேட்டிங் செய்ய வந்தார். மறுபுறம் ட்ராவிஸ் ஹெட் அதிரடியாக ரன் சேர்த்து வந்தார்.

அப்போது 58 வது ஓவரில் அஸ்வின் பந்துவீச்சை சந்தித்த மிட்செல் மார்ஷ் பந்தை தவறவிட்டார். பந்து அவரது காலில் பட்டதை போல இருந்தது. அஸ்வின் உடனே எல் பி டபிள்யூ அவுட் கேட்டார். ஆனால், அம்பயர் அவுட் தர மறுத்ததால் இந்திய அணி சார்பில் ரிவ்யூ செய்யப்பட்டது.
பந்து பேட்டில் படுகிறதா? அல்லது காலில் படுகிறதா? என சரியாக பார்க்க முடியவில்லை எனக் கூறிய அம்பயர் சந்தேகத்தின் அடிப்படையில் பேட்ஸ்மேனுக்கு சாதகமான முடிவை அறிவித்தார். அதன்படி, மிட்செல் மார்ஷ் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால், ரீபிளேவில் பந்து காலில் படுவது தெரிந்தது. அதனால், இந்திய வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விராட் கோலி அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் 64 வது ஓவரில் இந்த சம்பவத்திற்கான ஏற்பட்ட இழப்பை ஈடு கட்டும் வகையில் மற்றொரு சம்பவம் நடந்தது. 64 வது ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரில் மிட்செல் மார்ஷ் பந்தை அடிக்க முயன்றபோது பந்து அவரது பேட்டில் உரசாமல் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வசம் சென்றது.
ஆனால், பந்து பேட்டில் உரசிச் சென்றதா? என்ற சந்தேகத்தில் அஸ்வின் அரை மனதுடன் அம்பயரிடம் அவுட் கேட்டார். அம்பயர் எதிர்பாராத விதமாக அவுட் என அறிவித்தார். நிச்சயமாக மிட்செல் மார்ஷ் ரிவ்யூ செய்வார் என அஸ்வின் மற்றும் ரிஷப் பண்ட் நினைத்திருந்தனர். ஏனெனில், அவர்களுக்கும் இது சரி தானா? என்ற சந்தேகம் இருந்தது.
ஆனால், மிட்செல் மார்ஷ் தான் அவுட் ஆனதாக எண்ணி ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவர் ரிவ்யூ கேட்கவில்லை. பொதுவாக பேட்டில் பந்து பட்டதா? இல்லையா? என்பது பேட்ஸ்மேனுக்கு தெரிந்து இருக்கும். ஆனா;. மிட்செல் மார்ஷ் எந்த சந்தேகமும் எழாமல் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
அந்த வகையில் நான்கு ஓவர்களுக்கு முன் இந்திய அணிக்கு ஏற்பட்ட இழப்பு ஈடு செய்யப்பட்டது. மிட்செல் மார்ஷ் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் எடுத்தது. 157 ரன்கள் முன்னிலை பெற்றது.


Click it and Unblock the Notifications