மெல்போர்ன்: இந்திய வீரர்களை தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா மீடியாக்கள் வம்புக்கு இழுக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே விராட் கோலியின் குழந்தைகளை புகைப்படம் எடுக்கக் கூடாது என்று கூறியும் மீடியாக்கள் கேட்காத சர்ச்சை எழுந்த நிலையில், இன்று ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜடேஜா பதில் அளிக்கவில்லை என்று வம்புக்கு இழுக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்பதால், இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. கடந்த முறை பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அஜிங்கியா ரஹானேவின் அபார சதம் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றது.

இதனால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இம்முறை மீண்டும் இந்திய அணி எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில், எளிதாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை ரீடெய்ன் செய்ய முடியும். இதனால் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இந்திய வீரர்களை தொந்தரவு செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நோக்குடன் ஆஸ்திரேலியா மீடியாக்கள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வழக்கமாக ஆஸ்திரேலியா அணியின் 12வது வீரராகவே ஆஸ்திரேலியா மீடியாக்கள் செயல்படும். சிறிய விஷயம் கிடைத்தாலும், அதனை ஊதி பெரிதாக்கி அந்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.
இம்முறை ஆஸ்திரேலியா மீடியாக்கள் முதலில் முகமது சிராஜை டார்கெட் செய்தனர். ஆனால் முகமது சிராஜ் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் களத்தில் தனது பணியை சிறப்பாக செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி தனது குடும்பத்துடன் விமான நிலையத்திற்கு சென்ற போது, ஆஸ்திரேலியா மீடியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பிரச்சனையை உருவாக்கினார்.
விராட் கோலியின் இரு குழந்தைகளையும் புகைப்படம் எடுக்க முயற்சித்ததால், விராட் கோலி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனது அனுமதியில்லாமல் குழந்தைகளின் புகைப்படத்தை எடுக்க கூடாது என்று வலியுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை. இந்த நிலையில் இன்று ரவீந்திர ஜடேஜா இந்திய பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் இந்திய பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு மட்டுமே ஜடேஜா பதில் அளிப்பார் என்று இந்திய அணியின் மீடியா மேனேஜர் மூலம் முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ஜடேஜாவின் செய்தியாளர்கள் சந்திப்பை கவனிப்பதற்காக ஆஸ்திரேலியா மீடியாக்களும் வந்துள்ளன. அப்போது ஜடேஜாவிடம் சில கேள்விகளை ஆஸ்திரேலியா மீடியாக்கள் எழுப்பியுள்ளனர்.
அதற்கு ரவீந்திர ஜடேஜா பதில் அளிக்கவில்லை. இந்திய பத்திரிகையாளர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் இந்தியில் பதில் அளித்து சென்றார். இதனால் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜடேஜா பதில் அளிக்க முன் வரவில்லை. மெல்போர்னில் நின்று கொண்டு ஆஸ்திரேலியா மீடியாக்களிடம் பேச மறுப்பதாக சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.