சிட்னி: மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவுட் கொடுக்கப்பட்டதை போலவே சிட்னி டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு 3வது நடுவர் அவுட் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் ஆஸ்திரேலியா வழக்கம் போல் ஏமாற்றுவதாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 84 ரன்கள் எடுத்திருந்த போது, கம்மின்ஸ் வீசிய பவுன்சரி பந்தில் ஷாட் அடிக்க பேட்டிங் ஓங்கினார். ஆனால் அது லெக் சைடில் விலகி சென்ற போது, ஜெய்ஸ்வாலால் அதனை அடிக்க முடியவில்லை. அப்போது விக்கெட் கீப்பர் கேரி மற்றும் கம்மின்ஸ் இருவரும் அவுட் என்று அப்பீல் செய்தனர்.

அதற்கு கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை. பின்னர் டிஆர்எஸ் அப்பீலில், ஜெய்ஸ்வாலுக்கு அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் ஸ்னிக்கோமீட்டரில் பேட்டில் பந்து உரசியதற்கான எந்த தடயமும் இருக்கவில்லை. இருந்தாலும் கள நடுவரின் முடிவை மாற்றி ஜெய்ஸ்வாலுக்கு 3வது நடுவர் அவுட் கொடுத்தார். இது சுனில் கவாஸ்கர் உட்பட இந்திய அணி ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் சிட்னி டெஸ்ட் போட்டியிலும் அரங்கேறியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் 11 ரன்களில் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது கம்மின்ஸ் மீண்டும் ஜெய்ஸ்வாலுக்கு வீசியதை போலயே லெக் சைடு திசையில் பந்தை வீசினார். அதனை அடிக்க முயன்று வாஷிங்டன் சுந்தர் மிஸ் செய்தார்.
அதேபோல் மீண்டும் கேரி மற்றும் கம்மின்ஸ் அப்பீல் கேட்க, அதேபோல் கள நடுவர் நாட் அவுட் கொடுத்தார். ஆனால் உடனடியாக கம்மின்ஸ் டிஆஅர்எஸ் முறையீட்டிற்கு சென்றார். அப்போது வாஷிங்டன் சுந்தர் பேட்டின் அருகில் பந்து சென்ற போதே ஸ்னிக்கோமீட்டரில் உராய்வு தெரிய தொடங்கியது. அதன்பின் பேட்டை கடந்த போதும் உராய்வு தெரிந்து கொண்டே இருந்தது.
ஆனால் ரீப்ளேவில் பார்க்கும் போது கிளவுஸ் மற்றும் பந்து இடையில் நல்ல இடைவேளை இருந்தது. அதனை ஜூம் செய்து பார்த்த போதும், இடைவேளை தெரிந்தது. இருப்பினும் கள நடுவரின் முடிவை மாற்றி 3வது நடுவர் அவுட் என்று முடிவை அறிவித்தார். இதனால் டென்ஷனான வாஷிங்டன் சுந்தர் விரக்தியுடன் பெவிலியன் நோக்கி நடந்தார்.
இந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி பேட்ஸ்மேன் இவ்வகையாக ஆட்டமிழப்பது தொடர்கதையாகியுள்ளது. ஆனால் இந்திய அணி பவுலிங்கின் போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு ஒருமுறை கூட தவறான முடிவு அளிக்கப்படவில்லை. அதேபோல்அம்பயர்ஸ் கால் அளிக்கப்பட்டு ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் அதிகமாக காப்பாற்றப்பட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.