அகமதாபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய விமானப் படை சார்பாக சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ள நிலையில், அதற்கான ஒத்திகை காட்சிகள் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் யுத்தத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அகமதாபாத் மைதானத்தில் 1.3 லட்சம் ரசிகர்கள் அமர நேரடியாக பார்க்க முடியும் என்பதால், கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவுள்ளார். அதேபோல் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்போனிஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கைகளால் கோப்பை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் உலகக்கோப்பையை வென்ற கேப்டன்கள் அனைவருக்கும் ஐசிசி மற்றும் பிசிசிஐ சார்பாக நேரில் பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஜாம்பவான்களான கபில் தேவ், எம்எஸ் தோனி உள்ளிட்டோர் அகமதாபாத் மைதானத்திற்கு நேரில் வரவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாலிவுட் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளனர்.
இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய விமானப் படை தரப்பில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை கவரும் வகையில் விமான சாகசங்காள் நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஒத்திகை காட்சிகளின் வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 9 ஐசிசி தொடர்களில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், சொந்த மண்ணில் நடக்கும் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. இதனால் 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.