பிசிசிஐ கிட்ட டீல் பண்ணியிருக்கீங்களா.. 4வது டெஸ்ட்.. அதிர வைத்த சர்ச்சை சைமண்ட்ஸ்!
சிட்னி : இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட உள்ள நான்காவது டெஸ்ட் நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
காரணம், அந்த போட்டி நடைபெற உள்ள பிரிஸ்பேன் நகருக்கு செல்லும் இந்திய அணிக்கு கடுமையான குவாரன்டைன் விதிகள் அமல்படுத்தப்படும் என குயின்ஸ்லாந்து அரசு கூறி உள்ளது.
அதை இந்திய அணி ஏற்க தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில், பிசிசிஐ குறித்து அதிர வைக்கும் கருத்து ஒன்றை கூறி உள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்.

சர்ச்சை
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இந்திய அணியை எந்த காலத்திலும் மறக்கவே மாட்டார். அவரது கிரிக்கெட் கேரியரை காலி செய்தது ஹர்பஜன் சிங்குடன் அவர் ஈடுபட்ட மோதல். "மங்கி கேட்" எனப்படும் அந்த சர்ச்சையில் பிசிசிஐ தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு சாதகமாக ஐசிசியில் பிரச்சனையை முடித்துக் கொண்டதாக அவர் முன்பு குற்றம் சுமத்தி இருந்தார்.

கடும் கட்டுப்பாடுகள்
இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள பிரிஸ்பேனில் கடும் கட்டுப்பாடுகள் இருப்பதை இந்திய அணி விரும்பவில்லை என்றால் அடுத்து என்ன நடக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன நடக்கும்?
இந்திய அணி போட்டி நடைபெறும் மைதானத்தை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. அது பற்றி ஆஸ்திரேலிய ஊடகங்கள் அளவுக்கு அதிகமாக விவாதம் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இது பற்றி தன் கருத்தை கூறி உள்ளார்.

சைமண்ட்ஸ் என்ன சொன்னார்?
அவர் கூறியதாவது - பிசிசிஐயுடன் டீல் செய்து இருக்கிறீர்களா? அவர்கள் மக்கள் மீது கொஞ்சம் அதிகாரத்தை கொண்டவர்கள். குயின்ஸ்லாந்து அரசு என்ன செய்ய அவர்களுக்கு அனுமதி அளிக்கிறதோ அதைத் தான் அவர்கள் செய்தாக வேண்டும். ஆனால், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்திய என்ன நினைக்கிறதோ அதுதான் நடக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications