கவுஹாத்தி : இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அணியில் தன் இடத்தை இழக்கும் நிலையில் இருக்கிறார். மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில், இந்தப் போட்டியே அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கக் கூடும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று இருக்கும் அவர் இதுவரை நடந்த இரண்டு டி20 போட்டிகளில் சுமாரான பவுலிங் வீசி ஏமாற்றம் அளித்து இருக்கிறார்.
அவருக்கு அடுத்து அணியில் இடத்தை பிடிக்க மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் காத்துக் கொண்டு இருப்பதால் அவர் மூன்றாவது டி20 போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அந்தப் போட்டியில் இந்திய அணி மொத்தமே 3 விக்கெட்கள் தான் வீழ்த்தியது. அதனால் விக்கெட் வீழ்த்தாமல் போனது பெரிய பலவீனம் இல்லை. ஆனால், அவர் 4 ஓவர்களில் 41 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மற்றொரு வேகப் பந்துவீச்சாளரான பிரசித் கிருஷ்ணா அவரை விட அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த போதும் 1 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து இரண்டாவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 46 ரன்களை வாரி இறைத்தார். இந்தப் போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தினார். ஆனால், அதுவும் ஆஸ்திரேலியாவின் 9வது விக்கெட்டாக அந்த அணியின் பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா விக்கெட்டை தான் வீழ்த்தினார்
பவர் பிளே ஓவர்களில் பந்து வீசும் அர்ஷ்தீப் சிங் தனது முதல் இரண்டு ஓவர்களில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. டி20 போட்டிகளில் தொடர்ந்து விக்கெட் வீழ்த்துவது கடினம் என்றாலும் ரன்களை விட்டுக் கொடுப்பதில் கொஞ்சம் கவனமாக இருக்கலாம். அதிலும் சொதப்பி இரண்டு போட்டிகளிலும் ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கும் மேல் கொடுத்துள்ளார். சமீப காலமாக இவரது ஃபார்ம் சரிந்து வருவதாக கருதப்படும் நிலையில் அவர் அணியில் தன் இடத்தை ஆவேஷ் கானிடம் இழக்க வாய்ப்பு உள்ளது.
வேகப் பந்துவீச்சாளரான ஆவேஷ் கான் தற்போது இந்திய டி20 அணியில் மாற்று வீரராக ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்று இருக்கிறார். மூன்றாவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் சொதப்பினால் கடைசி இரண்டு போட்டிகளில் நிச்சயம் ஆவேஷ் கான் அணியில் வாய்ப்பை பெறுவார்.