மும்பை: இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான அர்ஷ்தீப் சிங் ஆரம்ப நாட்களில் 2 வார்த்தைகள் பேசுவதே அதிசயமாக இருக்கும் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரே ஆண்டில் அர்ஷ்தீப் சிங் வாயை அடைக்க கெஞ்சும் நிலை உருவாகியதாக கூறிய கேஎல் ராகுல், இந்திய யு19 அணிக்காக விளையாடிய போதும் அவரிடம் எந்தவொரு திமிரும் இல்லை என்று பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி நாளை விளையாட உள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துவிட்ட நிலையில், இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நெருங்கிவிட்ட சூழலில், இந்திய வீரர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பும்ராவுக்கு பின் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் உருவெடுத்துள்ளார். ஏற்கனவே பும்ரா இல்லாத போது, அர்ஷ்தீப் சிங் கூடுதல் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார். நாளுக்கு நாள் அவரது பவுலிங்கில் ஸ்விங்கும், துல்லியமும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆஸ்திரேலியா மண்ணில் அர்ஷ்தீப் சிங்கின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் அர்ஷ்தீப் சிங்கின் தொடக்க காலம் தொடர்பாக கேஎல் ராகுல் பேசிய கருத்துக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் கேஎல் ராகுல் பேசுகையில், அர்ஷ்தீப் சிங் சில நேரங்களில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பார். 18 வயதிலேயே பஞ்சாப் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதனால் எனது கேப்டன்சியில் 2 முதல் 3 ஆண்டுகள் விளையாடினார் என்று நினைக்கிறேன்.
அதனால் எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. அவரை ஒரு தம்பி போல் பார்க்கிறேன். பஞ்சாப் அணிக்குள் வந்த போது அர்ஷ்தீப் சிங் 2 வார்த்தைகள் பேசுவதே பெரிய விஷயம். அப்போது எங்களிடம் பேசவே மாட்டார். அவரின் வட்டத்திற்குள் அர்ஷ்தீப் சிங் பேசுவார் என்று கருதினேன். அவரும் ரவி பிஷ்னாயும் மிகவும் அமைதியாக இருப்பார்கள். சில நேரங்களில் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
ஏனென்றால் உடல்மொழியில் எந்த ஒரு திமிரும் இருக்காது. ஏற்கனவே இந்திய யு19 அணிக்காக விளையாடி இருக்கின்றனர். ஆனாலும் ஒரு வார்த்தை பேச தயங்குவார்கள். அவர்களிடம் தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவாக இருக்கிறதோ என்று நினைத்தேன். ஆனால் அடுத்த ஆண்டே அர்ஷ்தீப் சிங்கின் உள்ளுக்குள் இருந்த டிராகன் வெளி வந்துவிட்டது.
வாயைத் திறந்தால் நிறுத்தவே மாட்டார்கள். அவர்கள் இருவரையும் பேசாமல் இருங்கள் என்று கெஞ்ச வேண்டும். அவ்வளவு பேசுவார்கள். அர்ஷ்தீப் சிங்கை போல் தான் இப்போது அத்தனை இளம் வீரர்களும் இருக்கிறார்கள். டெஸ்ட் அணியில் நானும், பும்ராவும் மட்டுமே இருக்கிறோம். எங்கள் அணியில் உள்ள வீரர்களின் வயதிற்கும், எங்களின் வயதிற்கும் உள்ள வித்தியாசம் நன்றாக தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.