ஹோபர்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 2 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதனால் பயிற்சியாளர் கம்பீர் இனியாவது ஹர்சித் ராணாவை விட அர்ஷ்தீப் சிங்கிற்கு உரிய மரியாதையை வழங்குவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஹோபர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்சித் ராணா ஆகிய மூவரும் நீக்கப்பட்டனர்.

அவர்களின் இடத்தில் ஜித்தேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டனர். முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்படாதது கடுமையான விமர்சனங்களை பெற்றது. இந்திய டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரை கம்பீர் பெஞ்ச் செய்கிறார் என்று ரசிகர்கள் சாடி வந்தனர்.
இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து 3வது ஓவரில் ஜோஷ் இங்லிஸ் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாக பவர் பிளேவில் 2 ஓவர்களை வீசிய அர்ஷ்தீப் சிங் வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இதன் மூலமாக ஹர்சித் ராணாவை விடவும் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் தாம் என்பதையும் அர்ஷ்தீப் சிங் நிரூபித்து காட்டி இருக்கிறார். இதன் காரணமாக இனியாவது இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஹர்சித் ராணாவை முன்னிலைப்படுத்தாமல், அர்ஷ்தீப் சிங்கிற்கான உரிய மரியாதையையும், அவருக்கான நிரந்தர இடத்தையும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஒருநாள் தொடரின் போதும் ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் இரு போட்டிகளில் சொதப்பிய அவர், கடைசி போட்டியில் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது முதல் இரு போட்டிகளில் ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.