சிட்னி: இந்தியா ஏ அணியுடனான பயிற்சியின் போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான சுப்மன் கில், கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரையும் ஆஸ்திரேலியாவிலேயே இருக்க பிசிசிஐ அறிவுறுத்த வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக இந்தியா ஏ அணி வீரர்கள் இணைந்து இந்திய அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயிற்சியின் போது முதல் நாள் ஆட்டத்திலேயே நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் பேட்டிங்கின் போது காயமடைந்தனர்.

இதன்பின் உடனடியாக விராட் கோலி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டார். அதன்பின் எந்த சிக்கலும் என்று தெரிய வந்த நிலையில், 2வது நாள் பயிற்சியின் போது பேட்டிங் செய்தார். ஆனால் கேஎல் ராகுலின் முழங்கையில் ஏற்பட்ட காயத்திற்கு பின், அவர் குணமடைய எவ்வளவு நாட்களாகும் என்று தெரியாமல் உள்ளது.
இந்த நிலையில் நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு ஃபீல்டிங்கின் போது விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் பெர்த் மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், அனுபவ வீரர்களும் அடுத்தடுத்து காயமடைவது இந்திய அணி நிர்வாகத்தை கலக்கமடைய செய்திருக்கிறது.
இதனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மாற்று திட்டங்களையும் ஆராய தொடங்கியுள்ளார். இதற்காக ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவிலேயே தங்க வைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான இறுதி முடிவை பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் தான் எடுக்க வேண்டும். ஏற்கனவே டாப் ஆர்டரில் விளையாடுவதற்காக அபிமன்யூ ஈஸ்வரன் இருக்கும் நிலையில், சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரில் ஒருவரை ஆஸ்திரேலியாவில் தங்க வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.