சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான சுப்மன் கில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணியின் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல் எந்த பேட்டிங் வரிசையில் களமிறங்குவார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சிட்னி மைதானத்தில் நடக்கவுள்ளது. இதுவரை நடந்து முடிந்துள்ள 4 டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணிக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் பார்டர் கவாஸ்கர் டிராபியை ரீடெய்ன் செய்ய இந்திய அணி கடைசி டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான கடைசி வாய்ப்பும் இந்த ஒரு போட்டி தான். இந்த போட்டியில் வென்றால், இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முடிவை வைத்து இந்திய அணியின் தலைவிதி தெரிய வரும். ஆனால் அதற்கு சிட்னி டெஸ்டில் இந்திய அணி வெல்ல வேண்டும்.
அதேபோல் சிட்னி மைதானத்தின் கடைசி 2 நாட்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப முதல் 3 நாட்களிலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பிட்சில் எந்த உதவியும் இருக்காது என்று பார்க்கப்படுகிறது. அதனால் மெல்போர்ன் மைதானத்தை போல் இந்திய அணி 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக 2 ஸ்பின்னர்களில் வாஷிங்டன் சுந்தர் பெஞ்ச் செய்யப்படுவார் என்று தெரிகிறது. அதேபோல் கடந்த போட்டியில் பெஞ்ச் செய்யப்பட்ட இளம் வீரர் சுப்மன் கில் மீண்டும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார். கடந்த 2 ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணியில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் சுப்மன் கில் தான் இருந்தார்.
இதனால் கடைசி டெஸ்டிலும் சுப்மன் கில் பெஞ்ச் செய்யப்பட்டால், நிச்சயம் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் சிக்கல் உருவாகும். ஆனால் சுப்மன் கில்லை இந்திய பிளேயிங் லெவனில் சேர்ப்பதில் மற்றொரு குழப்பமும் இந்திய அணிக்குள் வரும். அதாவது சுப்மன் கில் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் மட்டுமே கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்துள்ளார்.
கடந்த போட்டியிலேயே கேப்டன் ரோஹித் சர்மா தனது தொடக்க வீரர் பேட்டிங் வரிசைக்கு திரும்பிவிட்டார். இதனால் கேஎல் ராகுல் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்குவாரா அல்லது நம்பர் 6 பேட்டிங் வரிசைக்கு மீண்டும் அனுப்பப்படுவாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை கேஎல் ராகுல் நம்பர் 6 பேட்டிங் வரிசைக்கு அனுப்பப்பட்டால், ரோஹித் சர்மாவுக்கு அதுவே கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்.
ஏனென்றால் இந்த டெஸ்ட் தொடரில் 8 இன்னிங்ஸில் 259 ரன்களை விளாசி இருக்கிறார். கன்சிஸ்டன்சி பிரச்சனை இருந்தாலும், ஒரு தொடக்க வீரராக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதனை சிறப்பாக செய்து வருகிறார். வேகப்பந்துவீச்சாளர்களை சோர்வடைய வைப்பதோடு, புதிய பந்தின் பளபளப்பை குறைத்துவிடுகிறார். இதனால் இந்திய அணி நிர்வாகம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.