மொஹாலி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் அஸ்வின் முதலில் தடுமாறினாலும், பின் சிறப்பாக பந்துவீசி தப்பித்தார்.
மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆடியது இந்திய அணி. டாஸ் வென்ற கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணி ஷமி, பும்ராவை முதலில் பந்து வீச வைத்து, ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை எடுத்தது. அவர்கள் இருவரும் வீசிய முதல் எட்டு ஓவர்களில் ஆஸ்திரேலியா மிக நிதானமாக ரன் சேர்த்தது.
அதன் பின் பந்து வீசிய அஸ்வின் ஓவர்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகமாக ரன் குவிக்கத் துவங்கினர். வார்னர் அதிரடியாக சிக்ஸ் அடித்தார். அப்போதே அஸ்வின் ஒருநாள் போட்டிக்கு சரிப்பட்டு வரவில்லை என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விமர்சனத்தை தொடங்கினர்.
அஸ்வின் தனது முதல் ஆறு ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து இருந்தார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. அடுத்து அவர் தன் கடைசி நான்கு ஓவர்களை வீச வந்தார். அப்போது ரன்களை கட்டுப்படுத்தினார்.
33வது ஓவரின் போது அஸ்வின் மார்னஸ் லாபுஷேன்-க்கு வீசிய பந்தை ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற லாபுஷேன் கையில் பந்து பட்டு விக்கெட் கீப்பர் ராகுல் வசம் பந்து சென்றது. ஆனால், ராகுல் அந்த கேட்சை தவறவிட்டார்.
அஸ்வினுக்கு கிடைத்த ஒரே ஒரு விக்கெட்டும் போச்சே என நினைத்த போது அதிர்ஷ்டவசமாக ராகுல் கையில் பட்டு தவறிய பந்து ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. ஸ்டம்பிங் முறையில் லாபுஷேன் ஆட்டமிழந்தார். அஸ்வினுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.
முதல் ஆறு ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்த அஸ்வின், 10 ஓவர்கள் வீசி முடித்த போது 47 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்தப் போட்டியில் பும்ராவுக்கு அடுத்து குறைந்த ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர் அஸ்வின் தான். கேப்டன் ராகுல் அந்த கேட்சை விட்டு அஸ்வினுக்கு ஆப்பு வைக்கப் பார்த்தாலும், எப்படியோ அவருக்கு விக்கெட் கிடைத்து விட்டது.