மொஹாலி : இந்திய ஒருநாள் அணியில் அஸ்வின் நீண்ட இடைவெளிக்கு பின் இடம் பெற்றுள்ளார்.
இது திடீரென எடுத்த முடிவாக இருக்கும் என்றே ரசிகர்கள் எண்ணி வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த திட்டத்தை அஸ்வினிடம் கூறி இருக்கிறார் ரோஹித் சர்மா. கேப்டன் ரோஹித் சர்மா ரகசியமாக வைத்திருந்த இந்த விஷயத்தை அஸ்வின் போட்டு உடைத்துள்ளார்.
அக்சர் பட்டேல் காயம் : இந்திய அணி உலகக்கோப்பைக்கான அணியை ஏற்கனவே அறிவித்து விட்டது. அதில் இடம் பெற்ற ஒரே ஆஃப் ஸ்பின்னர் அக்சர் பட்டேல் மட்டுமே. அவர் ஆல் - ரவுண்டர் என்பதால் அணியில் இடம் பெற்றார். ஆசிய கோப்பை தொடரில் ஆடிய அவருக்கு அப்போது காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் உலகக்கோப்பையில் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்தது.

ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின் : அப்போது வாஷிங்க்டன் சுந்தர் அவருக்கு மாற்று வீரராக அழைக்கப்பட்ட நிலையில், திடீரென ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் என இருவரின் பெயர்களும் இடம் பெற்றன. உலகக்கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக நடக்கும் இந்த தொடரில் அஸ்வின் வாய்ப்பு பெற்று இருப்பதால் அவர் உலகக்கோப்பை தொடரில் ஆடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.
ரோஹித் சர்மா சொன்ன விஷயம் : இது பற்றி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன் பேசிய அஸ்வின், ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் போதே தான் உலகக்கோப்பையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தனக்கு சொல்லப்பட்டது என்றும், அதனால் தான் அதன்பின் கிளப் போட்டிகளில் பங்கேற்று பயிற்சி செய்து வந்ததாகவும் கூறி இருக்கிறார். அனேகமாக ரோஹித் சர்மா, இதை அஸ்வினுக்கு தெரிவித்து இருக்கலாம்.

உலகக்கோப்பை வாய்ப்பு : அஸ்வின் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கக் கூடும். டிராவிட் பேசுகையில் கூட அவரது அனுபவம் தான் எங்களுக்கு முக்கியம். அவர் ஒருநாள் போட்டி சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் அளவுக்கு அனுபவம் மிக்கவர் என கூறினார்.