துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்துவது குறித்து, அஸ்வின் முன்பே சரியாக கணித்துக் கூறி இருந்தார். அஸ்வின் கூறிய யோசனையை தான் கேப்டன் ரோஹித் சர்மாவும் செயல்படுத்தினார். அது வெற்றியும் பெற்றது. இது ரசிகர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை தொடர்களின் இறுதிப் போட்டிகளில் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிராக சதங்களை அடித்து தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் தான் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடியது.

டிராவிஸ் ஹெட் இந்த முறையும் அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்ற அச்சம் அனைவருக்கும் இருந்தது. போட்டிக்கு முன் இது பற்றி அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் பேசுகையில், "வருண் சக்கரவர்த்தியை முதல்
பவர் பிளேவில் 10 ஓவர்களுக்குள் பயன்படுத்தினால் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.
ஏனெனில், இதற்கு முன் டிராவிஸ் ஹெட் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை சந்தித்தது இல்லை. ஐபிஎல் தொடரிலும், சர்வதேச போட்டிகளிலும் இதுவரை அவர் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் பேட்டிங் செய்ததில்லை. வருண் சக்கரவர்த்தி பந்து வீசுவது அன்ஆர்தடக்ஸ் (unorthodox) முறை ஆகும். புதிதாக அவரை சந்திக்கும் பேட்ஸ்மேன்கள் அதை சரியாக கணிக்க முடியாமல் ஆட்டம் இழப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
நேற்றைய போட்டியிலும் அதே விஷயம் தான் நடந்தது. 9வது ஓவரில் டிராவிஸ் ஹெட் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு இறங்கி வந்து அடித்தார். ஆனால், பந்து மிகவும் மெதுவாக வந்ததால் அவர் நினைத்த தூரத்திற்கு பந்து செல்லவில்லை. லாங் ஆஃப் திசையில் ஃபீல்டிங் நின்றிருந்த சுப்மன் கில் ஓடி வந்து பந்தை கேட்ச் பிடித்து விட்டார்.
டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இது அந்தப் போட்டியின் திருப்புமுனையாகவும் அமைந்தது. டிராவிஸ் ஹெட் இன்னும் சில பந்துகள் நின்று இருந்தால் அரை சதம் தாண்டி அதிக ஸ்கோர் அடித்திருப்பார். இதை அடுத்து அஸ்வின் எப்படி சரியாக வருண் சக்கரவர்த்தி தனது விக்கெட்டை வீழ்த்துவார் என கணித்து கூறினார் என ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்திய அணி இந்த போட்டியில் 265 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. 48.1 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி 84 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்கள், கே.எல். ராகுல் 42 ரன்களும் அடித்து இருந்தனர்.