அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில் 9 ரன்களிலும், விராட் கோலி டக்அவுட் ஆகியும் ஆட்டம் இழந்தனர். எனினும் ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரோஹித் 73 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயர் 61 ரன்களில் ஆட்டம் இழக்க, நடுவரிசையில் விளையாடிய அக்சர் பட்டேல் 41 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 11 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களிலும் நிதிஷ்குமார் ரெட்டி 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ஹர்ஷித் ரானா 24 ரன்களிலும், ஆர்ஸ்தீப் சிங் 13 ரன்களும் எடுக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு உடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 11 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 28 ரன்களிலும், மாட் ரீன்ஷா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பொறுப்பாக விளையாடிய மேத்யூ ஷாட் 78 பந்துகளை எதிர்கொண்டு 74 ரன்கள் சேர்த்தார். அலெக்ஸ் கெரி 9 ரன்கள் ஆட்டம் இழக்க இந்தியாவின் வெற்றி கதவு லேசாகத் திறந்தது. ஆனால் ஆஸ்திரேலியா அணியின் நடுவரிசை வீரர்களான கூப்பர் 61 ரன்களும் மிட்செல் ஓவன் 36 ரன்களும் எடுத்து ஆஸ்திரேலிய அணியில் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் இந்திய பவுலர்கள் விக்கெட்டை எடுத்தாலும், வெற்றிக்கு தேவையான இலக்கு குறைவாக இருந்ததால், அந்த அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.