பிரிஸ்பேன்: இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த அணியின் மிட்சல் ஸ்டார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாளை காலை முதல் செஷன் சிறப்பாக அமைந்தால், ஃபாலோ ஆன் வாய்ப்பை பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரின் அபார சதத்தால் 445 ரன்களை குவித்துள்ளது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 3வது நாள் ஆட்டம் முடிவில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இருந்தாலும் கேஎல் ராகுல் 33 ரன்களும், ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளனர். அதேபோல் அடுத்தடுத்து ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகிய இரு பேட்ஸ்மேன்கள் களமிறங்க உள்ளனர். இதனால் இந்திய அணியால் கவுரவமான ஸ்கோரை எட்டும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே ஃபாலோ ஆனை தவிர்த்த இந்திய அணி மேலும் 194 ரன்களை குவிக்க வேண்டிய தேவை உள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் மிட்சல் ஸ்டார்க் பேசுகையில், இந்த ஆட்டத்தின் பிடி எங்களின் கைகளில் இருப்பதாக நினைக்கிறேன். இந்தப் போட்டியின் பாதை நாளைய ஆட்டத்தின் மூலமாக தெரிய வரும். ஒருவேளை நாளை நடக்கும் முதல் செஷனைல் எங்களால் சரியான இடங்களில் பந்தை பிட்ச் செய்து விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தால், ஃபாலோ ஆன் திட்டம் குறித்து ஆலோசிப்போம்.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களின் அபார ஆட்டத்தால், இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலியா அணி சுமார் 450 ரன்களை குவித்துள்ள நிலையில், இந்திய அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனால் நாளைய ஆட்டத்தின் முதல் செஷனில் தெரிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆஸ்திரேலியா அணி கடைசியாக 2019-20ஆம் ஆண்டு அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தான் ஃபாலோ ஆன் கொடுத்தது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்றிருந்தாலும், பெரிதாக எந்த அணிக்கும் ஃபாலோ ஆன் கொடுத்ததில்லை. ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் பொறுப்பேற்ற பின், 5 முறை பல்வேறு அணிகளுக்கு எதிராக ஃபாலோ ஆன் கொடுக்க வாய்ப்பு கிடைத்த போதும், அதனை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.