கோல்ட் கோஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்கள் சிலர் விளையாடவில்லை. பாரம்பரியமிக்க ஆசஸ் டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 21ஆம் தேதி தொடங்குவதால் அதற்கு தயாராகும் விதமாக ஹேசல்வுட் உள்ளிட்ட வீரர்கள் விலகி விட்டனர்.
இன்றைய ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலியா அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. இது தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ், 167 ரன்கள் என்ற இலக்கு இந்த ஆடுகளத்திற்கு ஏற்ற ஒன்றுதான் என்று நினைத்தேன்.

ஆனால் ஆடுகளம் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சவால்களாக இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். அது எங்களால் முடியாமல் போய்விட்டது. இதற்கு இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள்.
இதுபோன்ற சூழலில் அவர்களை எல்லாம் வீழ்த்த வேண்டும் என்றால் முழு பலத்துடன் விளையாட வேண்டும். ஆனால் அடுத்தது ஆசஸ் தொடர் வர இருப்பதால் சிலர் போட்டியை விட்டு விலகி விட்டார்கள். இதன் மூலம் நாங்கள் புதுமுக வீரர்களை வைத்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு அணியை தயார் செய்து வருகின்றோம்.
இது போன்ற அதிக அழுத்தம் உள்ள போட்டிகளில் வீரர்கள் விளையாடினால் அது அவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று நினைக்கின்றேன். மொத்தத்தில் இது ஒரு நல்ல வாய்ப்பு என்று சொல்வேன் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் இந்தியா வென்றால் தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி விடும்.