அடிலெய்ட் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அடிலெய்டில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவி இருப்பதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது அதிரடி மாற்றம் ஒன்று செய்யப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து இருக்கக்கூடிய மிட்செல் மார்ஸ் முதல் டெஸ்டில் 17 ஓவர்கள் வீசினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் வீசிய அதிக ஓவர்கள் இதுதான். இதன் மூலம் அவருடைய உடல் பகுதி பாதிக்கப்பட்டு இருக்கிறது. பந்துவீச்சில் மார்ஸ் பெரிய அளவில் ஓவர் வீச முடியாததால் மற்ற மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் அதிகமாக பந்து வீசக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக பியூ வெப்ஸ்டர் என்ற ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டிருக்கிறார். கடந்த இரண்டு சீசன்களாக முதல் தர கிரிக்கெட்டில் வெப்ஸ்டர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஒரே சீசனில் கெரி சோபர்ஸ்க்கு பிறகு பேட்டிங்கில் 900 ரன்கள் பந்துவீச்சில் 30 விக்கெட் வீழ்த்திய சாதனையை வெப்ஸ்டர் படைத்திருக்கிறார்.
நடப்பு சீசனில் மட்டும் பேட்டிங்கில் 448 ரன்களும், பந்துவீச்சில் 16 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார். அண்மையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கூட ஆஸ்திரேலியா அணியில் வெப்ஸ்டர் களமிறங்கி பேட்டிங்கில் 61 மற்றும் 48 ரன்கள் எடுத்திருந்தார். மூன்று விக்கெட்டுகளை இரண்டு முறை பயிற்சி ஆட்டத்தில் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி தற்போது பலவீனமாக இருப்பதால் வெப்ஸ்டர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
மிட்செல் மார்ஷ்க்கு பதிலாக வெப்ஸ்டர் களமிறங்க கூடும். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பலம் அதிகரித்து இருக்கிறது. ஆஸ்திரேலியனில் சேர்க்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெப்ஸ்டர், பலமான இந்திய அணிக்கு எதிராக தான் சிறப்பாக பயிற்சி ஆட்டத்தில் விளையாடினேன். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.