பெர்த்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மிக மோசமான சாதனை ஒன்றை பதிவு செய்தது. கடந்த 1980க்கு பின் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் 40 ரன்கள் எட்டுவதற்குள் 5 விக்கெட்களை இழந்து இருக்கிறது. கடந்த 44 ஆண்டுகளில்
இந்த மோசமான நிகழ்வு இரண்டாவது முறையாக நடந்துள்ளது. அந்த அளவுக்கு இந்திய அணியின் பந்துவீச்சை சந்திக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். ரன் எடுக்கக் கூடத் தேவை இல்லை. களத்தில் நின்றால் போதும் என்ற மனநிலையில் தான் சில ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடினர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்த முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அதனால் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்துவதை போன்ற எண்ணம் இருந்தது.
ஆனால், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் இந்திய அணியை விட மிக மோசமாக தடுமாறியது. 38 ரன்கள் எடுத்து 5 விக்கெட்களை இழந்து பரிதாபமாக காட்சி அளித்தது. இதன் மூலம் 2016 ஆம் ஆண்டு பின் முதன் முறையாக 40 ரன்களை எட்டுவதற்கு 5 விக்கெட்களை இழந்து மோசமான சாதனையை படைத்தது.
மேலும், கடந்த 44 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் இந்த போன்ற சம்பவம் நடப்பது இரண்டாவது முறை ஆகும். 2016 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஹோபர்ட் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 17 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்தது ஆஸ்திரேலிய அணி.
தற்போது இந்திய அணிக்கு எதிராக 38 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்துள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 59 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து இருந்தது.