மொஹாலி : இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது ஆஸ்திரேலிய அணி.
அந்த அணி உலகக்கோப்பைக்கு முன் ஆடும் கடைசி தொடர் என்பதால் தங்கள் அணியின் பலவீனங்களை சரி செய்து கொள்ள இதுவே கடைசி வாய்ப்பு.

அந்த வகையில் அந்த அணி அதிரடி ஆட்டம் ஆடுவதே கடந்த தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த போட்டிகளை பார்க்காத யாராலும் இதை நம்ப முடியாது. ஆனால், அதுதான் உண்மை.
ஐந்து போட்டிகள் கொண்ட தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளை வென்று இருந்தது. ஆனால், கடைசி மூன்று போட்டிகளில் நூறுக்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்விகளை சந்தித்தது. தொடரையும் 3 - 2 என்ற கணக்கில் இழந்தது.
தோல்வி அடைந்த அந்த மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி பவர்பிளே ஓவர்களில் 8 ரன்கள் என்ற ரன் ரேட்டை வைத்திருந்தது. ஆஸ்திரேலிய புதிய முயற்சியாக ஒவ்வொரு போட்டியிலும் துவக்கத்தில் இருந்தே ரன் குவித்து தள்ளியது.
ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால் விக்கெட் வீழ்ந்தாலும் 8 என்ற ரன் ரேட்டை தொடரும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததுதான். அது மட்டுமின்றி, பேட்டிங் பலமாக இருந்தாலும் அதற்கு ஈடு கட்டும் பவுலிங் அந்த அணியிடம் இல்லை.
எனவே, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி தன் அதிரடி ஆட்டத்தை கைவிட்டு சூழ்நிலைக்கு ஏற்ப, விக்கெட் வீழ்ச்சிக்கு ஏற்ப தன் பேட்டிங் திட்டத்தை மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் போன்ற பல முக்கிய வீரர்கள் காயத்தில் சிக்கி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் தொடர்களில் ஆடாமல் இருந்தனர்.
இந்த வீரர்கள் ஃபார்மில் இருக்கிறார்களா, இல்லையா? என்பதே தெரியாமல் தான் ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. இது ஒரு பிரச்சனை என்றால், அதிரடி பேட்டிங் இருந்தும் தோல்வி ஏற்படுவது இன்னொரு முக்கிய பிரச்சனை. இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் இந்த தொடரில் ஆஸ்திரேலியா விடை தேட உள்ளது.