மும்பை: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக எந்த வீரர் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. டேவிட் வார்னரின் ஓய்வுக்கு பின் ஸ்டீவ் ஸ்மித் தொடக்கம் கொடுத்து வந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22 முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. கடந்த 2 முறையும் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது. இதன் காரணமாக 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணியால் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியவில்லை.

சொந்த மண்ணிலேயே தொடர்ந்து இரு முறை இந்திய அணியிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா அணிக்கு கவுரவப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஏனென்றால் இங்கிலாந்து மண்ணிலேயே ஆஷஸ் தொடரை தக்க வைத்த ஆஸ்திரேலியா, சொந்த மண்ணில் இந்திய அணியிடம் தோல்வியடைவதை ஏற்க முடியாமல் கொந்தளித்து வருகின்றன.
இதனால் தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலியா அணி தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு பேசுகையில், நிச்சயம் இதுகுறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.
ஏனென்றால் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது. அதுதொடர்பான திட்டங்கள் குறித்து விவாதம் நடக்கவில்லை என்றால், நான் பொய் சொல்கிறேன் என்றே அர்த்தம். ஒருவேளை ஸ்டீவ் ஸ்மித்தை மீண்டும் மிடில் ஆர்டருக்கு கொண்டு வந்தால், மாற்றாக வேறு வீரர் தொடக்கம் கொடுக்க வேண்டும். கேமரூன் க்ரீன் மிடில் ஆர்டரில் நன்றாக ஆடி வருகிறார் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட்டை தொடக்க வீரராக களமிறக்க ஆஸ்திரேலியா நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டி, இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்று டிராவிஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ஐபிஎல் தொடரிலும் ஒரு கை பார்த்துள்ளார் என்பதால், டிராவிஸ் ஹெட் என்றாலே இந்திய ரசிகர்களுக்கும் கொஞ்சம் அச்சம் உள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்காக தொடக்கம் கொடுத்து வருகிறார். ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரரால் பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோரின் தொடக்க ஸ்பெல்லை கடப்பது எளிதல்ல.
ஆனால் டிராவிஸ் ஹெட் போன்ற வீரர் சேவாக்கை போல் விக்கெட்டுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். இதனால் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க டிராவிஸ் ஹெட்டின் அதிரடி பாணியே சரியானது என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியா - டெஸ்ட் தொடர் குறித்த விவாதமும் அதிகரித்துள்ளது. ஒருவேளை டிராவிஸ் ஹெட் தொடக்கம் கொடுத்தால், ஆஸ்திரேலியாவின் பேட்டிங் கூடுதல் பலம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.