மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய சாம் கோன்ஸ்டாஸ் - உஸ்மான் கவாஜா கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 89 ரன்களை குவித்தது.
சிறப்பாக ஆடிய அறிமுக வீரர் கோன்ஸ்டாஸ் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் லபுஷேன் - கவாஜா கூட்டணி இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது. 2வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கவாஜா 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து லபுஷேன் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி இணைந்து இந்திய அணி பவுலர்களை சோதித்தது.

நிதானமாக ரன்கள சேர்த்த இவர்களை பிரிக்க முடியாமல் பவுலர்கள் திணறினர். இதன்பின் நீண்ட நேரத்திற்கு பின் அட்டாக்கில் வந்த வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கில் லபுஷேன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அதிரடி வீரர் ட்ராவிஸ் ஹெட் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த மிட்சல் மார்ஷ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்டீவ் ஸ்மித் - அலெக்ஸ் கேரி கூட்டணி இணைந்து கடைசி நேரத்தில் விரைவாக ரன்களை குவித்தது.
இதனால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 300 ரன்களை கடந்த போது, இந்திய அணி புதிய பந்தை கையில் எடுத்தது. அதில் ஆகாஷ் தீப் வேகத்தில் அலெக்ஸ் கேரி 31 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கம்மின்ஸ் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி மேலும் விக்கெட்டுகளை கொடுக்காமல் முதல் நாள் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 86 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்களை குவித்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் கைகள் ஓங்கியிருந்த போது, பும்ராவின் அபார பவுலிங்கால் 9 ரன்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி கம்பேக் கொடுத்தது.
இருப்பினும் 2வது நாள் ஆட்டம் தான் இந்தப் போட்டியின் போக்கை முடிவு செய்யும் என்று பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 360 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால், இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கல் தான். இதனால் நாளைய ஆட்டத்தின் முதல் செஷனிலேயே இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலியா அணியை ஆல் அவுட் செய்ய முயற்சிக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஆடுகளம் கொஞ்சம் ஸ்லோவாக மாறி வருவதை அறிய முடிகிறது. இதனால் இந்திய அணிக்கு பேட்டிங் செய்வது எளிதாக இருக்காது. புதிய பந்தில் அதிகமாக விக்கெட்டுகளை கொடுக்காமல் விளையாடினால் மட்டுமே இந்திய அணியால் ரன்களை குவிக்க முடியும். அதேபோல் இந்த பிட்சில் சேஸிங் செய்வதும் எளிதாக இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.