ராய்பூர் : நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்த மூன்று வீரர்களை வைத்து ஆஸ்திரேலிய அணி அதிரடி திட்டத்தை செயல்படுத்தும் என விமர்சகர்கள் கருத்து கூறி உள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இந்தியா இரண்டு போட்டிகளிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தியா இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.
அதைத் தடுக்க ஆஸ்திரேலியா நான்காவது போட்டியில் வெற்றி பெற அதிரடி திட்டத்தை வகுக்க உள்ளது. இதுவரை இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜோஷ் பெஹ்ரண்டாப் பவுலிங்கில் இந்திய அணியை கட்டுப்படுத்துவார்.

முதல் போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜோஷ் இங்லிஸ் சதம் அடித்தாலும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வருகிறார். அதை தவிர்க்க அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். நான்காவது போட்டியில் அவர் முதல் போட்டியில் ரன் குவித்தது போல அதிரடி ஆட்டம் ஆடி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பார்.
மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்த கிளென் மேக்ஸ்வெல் ஃபினிஷராக அதிரடி ஆட்டம் ஆடுவார். ஒருவேளை ஆஸ்திரேலிய அணி விரைவாக விக்கெட்களை இழந்தால் மேக்ஸ்வெல் கடைசி வரை நின்று ஆடுவார். இதற்கிடையே மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் ஃபார்முக்கு வந்து தங்கள் திறமையை காட்டினால் இந்தியாவுக்கு மேலும் சிக்கல் தான்.
இந்த மூன்று சவால்களையும் இந்தியா சமாளித்தால் மட்டுமே நான்காவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற முடியும். இந்தியா இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் ஐந்தாவது போட்டி இறுதிப் போட்டியாக மாறி மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும். அந்த அழுத்தத்துக்கு நடுவே இந்தியா வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்.