மொஹாலி : இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி மோத உள்ளது.
இந்த தொடரை கைப்பற்றினால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி ஊடகங்களிடம் சிக்காமல் நிம்மதியாக உலகக்கோப்பை தொடருக்கு செல்ல முடியும்.
என்ன நடந்தது? : 2023 உலகக்கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி அதற்கான பயிற்சியாக தென்னாப்பிரிக்க அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதியது. அந்த தொடரில் முக்கிய ஆஸ்திரேலிய வீரர்களான கேப்டன் பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் பங்கேற்கவில்லை. அவர்கள் காயம் காரணமாக விலகினர்.

படுதோல்வி : தென்னாப்பிரிக்க தொடரின் முதல் இரண்டு போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றது. ஆனால், அடுத்த மூன்று போட்டிகளில் மிக மோசமான நிலையில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தது. 111 ரன்கள், 164 ரன்கள், 122 ரன்கள் வித்தியாசத்தில் அந்த தோல்விகள் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது.
சிக்கல் : முக்கிய வீரர்கள் காயத்தால் இந்த தோல்வி என ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் சமாளித்தாலும், உலகக்கோப்பைக்கு முன் அணியின் நிலைமை இப்படி இருப்பதால் ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சனக் கணைகளை தொடுத்து வருகின்றன.
முழு பலமான அணி : அதில் இருந்து தப்ப வேண்டும் என்றால் இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 3 - 0 என்ற கணக்கில் முழுவதுமாக வெல்ல வேண்டும். அதற்கேற்ப இந்திய அணியும் முதல் இரண்டு போட்டிகளில் முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்க உள்ளது. மூன்றாவது போட்டியில் தான் ரோஹித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், பாண்டியா ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர்.
இந்திய அணிக்கு எதிராக ஆட உள்ள உத்தேச ஆஸ்திரேலிய அணி : டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், கேமரோன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசல்வுட்