மெல்போர்ன்: இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியிலும் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் பெஞ்ச் செய்யப்பட்டு, ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கு பின், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. கான்பெராவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்த போது திடீரென மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உலகின் மிகச்சிறந்த மைதானங்களில் ஒன்றான மெல்போர்ன் மைதானத்தில் 2வது டி20 போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் மிட்சல் மார்ஷ் பேசுகையில், நாங்கள் பவுலிங்கை தேர்வு செய்கிறோம்.
பிட்ச் சிறப்பாக உள்ளதாக நினைக்கிறேன். 40 ஓவர்களுக்கும் பெரிய மாற்றம் இருக்காது என்று நம்புகிறேன். ஆஸ்திரேலியா அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேத்யூ ஷார்ட்க்கு பதிலாக பிலிப் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், நாங்கள் முதல் பேட்டிங் ஆடுவதில் மகிழ்ச்சி தான். அட்டாக்கிங் ஸ்டைலில் டி20 கிரிக்கெட்டை விளையாட நினைக்கிறோம்.
சுப்மன் கில்லுக்கு எப்படி ரன்கள் சேர்ப்பது என்பது நன்றாக தெரியும். அவருடன் விளையாடும் போது அதிகளவில் ஓடி ஓடி ரன்கள் சேர்க்க வேண்டியதாக இருக்கும். இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார். இதனால் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அர்ஷ்தீப் சிங் பெஞ்ச் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்தில் ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்: சுப்மன் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, அக்சர் படேல், ஹர்சித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, பும்ரா.