அகமதாபாத்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லெக் ஸ்பின்னர்களால் மொத்தமாக 57 விக்கெட்டுகளில், ஆஸ்திரேலியா அணியின் ஆடம் ஜாம்பா மட்டும் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி காரணமாக அனைத்து அணிகளும் லெக் ஸ்பின்னர்களையே ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தேர்வு செய்து வருகின்றனர். ஆஃப் ஸ்பின்னர்களை எளிதில் அட்டாக் செய்ய முடியும் என்பதால், ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் வீசும் லெக் ஸ்பின்னர்கள் மற்றும் கூக்ளியை வீசும் திறமையுள்ள வீரர்களின் எழுச்சி அதிகமாக உள்ளது.

அந்த வகையில் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியின் ஆடம் ஜாம்பாவின் எழுச்சி அபரிதமான ஒன்றாக அமைந்துள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலிய அணியின் ஒரே முன்னணி ஸ்பின்னராக ஆடம் ஜாம்பா செயல்பட்டு, அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் அனைத்து அணிகளிலும் லெக் ஸ்பின்னர்கள் இருந்தாலும், மொத்தமாக வீழ்த்தப்பட்ட 57 விக்கெட்டுகளில் ஆடம் ஜாம்பா மட்டும் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
அதேபோல் 11 முதல் 40 வரையிலான ஓவர்களுக்கு இடையில் ஆஸ்திரேலியா அணி 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. அதில் ஆடம் ஜாம்பா மட்டும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆடம் ஜாம்பா அபாயகரமான வீரராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆடம் ஜாம்பா, இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலியை மட்டும் 8 முறை வீழ்த்தி இருக்கிறார்.
அதேபோல் நடப்பு உலகக்கோப்பை தொடரில் மட்டும் ஆடம் ஜாம்பா ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பந்துவீசுவதில் கில்லாடியாக இருக்கிறார். பெரும்பாலும் ஷார்ட் பால் லெந்தில் பிட்ச் செய்து பந்துவீசும் பழக்கம் கொண்ட ஆடம் ஜாம்பா, ஸ்கொயர் திசையில் பேட்ஸ்மேன்களை ஷாட் ஆட வைத்து விக்கெட் வீழ்த்துவதில் கில்லாடியாக இருக்கிறார். இதனால் இவரின் பந்துவீச்சை இந்திய அணி வீரர்கள் அனைவருமே கவனமாக விளையாட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.