மும்பை: மகளிர் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் மனைவி அலைசா ஹேலியின் ஆட்டத்தை பார்க்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மிட்சல் ஸ்டார்க் 10,500 கிமீ தூரம் கடந்து வந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்களிடையே விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இணையாக ஸ்டார்க் - அலைசா ஹேலி தம்பதிகள் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
மகளிர் உலகக்கோப்பைத் தொடரின் 2வது அரையிறுதி ஆட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் அலைசா ஹேலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் அலைசா ஹேலி - லிட்ச்ஃபீல்டு கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அலைசா ஹேலி 15 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இருந்தாலும் அடுத்தடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா வீராங்கனைகள் அசத்தலாக ஆடி வருகின்றனர். இதனால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்களாக இருந்தது.
இந்தப் போட்டியை பார்க்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மிட்சல் ஸ்டார்க் நேரில் வந்திருந்தார். நேரலையில் மிட்சல் ஸ்டார்க்கை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஏனென்றால் மனைவியின் ஆட்டத்தை பார்க்க மிட்சல் ஸ்டார்க் வந்திருப்பது தெரிய வந்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலைசா ஹேலியின் கணவர் மிட்சல் ஸ்டார்க்.
இருவரும் சிறுவயதிலேயே காதலித்து இறுதியாக 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வட்டாரத்தில் நட்சத்திர தம்பதிகளாக ஸ்டார்க் - ஹேலி கோடி வலம் வருகிறது. இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மிட்சல் ஸ்டார்க் விளையாடி இருந்தார். டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டதால், டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை.
அடுத்ததாக ஆஷஸ் தொடருக்காக மிட்சல் ஸ்டார்க் தயாராகி வருகிறார். இதனிடையே உலகக்கோப்பை தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் மனைவிக்கு ஆதரவாக இருக்க மிட்சல் ஸ்டார்க் 10,500 கிமீ தூரம் பயணித்து மும்பைக்கு வந்துள்ளார். இதனால் மிட்சல் ஸ்டார்க் - அலைசா ஹேலி ஜோடியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஏற்கனவே மிட்சல் ஸ்டார்க்கின் முக்கியமான போட்டிகளின் போது அலைசா ஹேலி நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளார். 2023 உலகக்கோப்பை தொடர், ஐபிஎல் தொடரில் கேகேஆர் - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி என்று அலைசா ஹேலி ஏராளமான முறை இந்தியா வந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.