மும்பை: இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியா அணி வெல்லவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கணிப்பை வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் அந்த அணியை வீழ்த்துவது எளிதான விஷயமல்ல என்று கூறியுள்ள தினேஷ் கார்த்திக், ஒருவேளை இந்தியா வென்றால் அது வரலாற்றில் இடம்பிடிக்கும் வெற்றியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளது. பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் ஓவல் மைதானத்திலும், 3வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி காபா மைதானத்திலும் நடக்கவுள்ளது.

இதன்பின் 11 நாட்கள் ஓய்வுக்கு பின் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. பின்னர் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் ஜனவரி 3ஆம் தேதியும் தொடங்கவுள்ளது. பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியா அணியால் கைப்பற்ற முடியாமல் திணறி வருகிறது.
இந்திய அணி சொந்த மண்ணில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மண்ணிலும் தொடர்ந்து இருமுறை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அதனால் இம்முறை இந்திய அணி வீரர்களை வீழ்த்த ஆஸ்திரேலியா அணி புதிய திட்டங்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக கேப்டன் பேட் கம்மின்ஸ், நேதன் லயன் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டெஸ்ட் தொடரின் கணிப்புகளை ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள் வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் இந்திய அணியின் பலங்களையும் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பார்டர் - கவாஸ்கர் டிராபியை எந்த அணி வெல்லும் என்ற தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், இரு அணிகளும் எத்தனை போட்டிகளில் வெல்லும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெறும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களின் மண்ணில் தொடர்ந்து 3வது முறையாக வெல்வது எளிதான விஷயம் கிடையாது.
ஒருவேளை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான சாதனையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை மனதில் வைத்து இந்திய அணி செயல்பட தொடங்கியுள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடரிலேயே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான பிட்ச் அமைக்கப்பட்டிருந்தது.
இன்னொரு பக்கம் இடதுகை வேகப்பந்துவீச்சாளரை இந்திய அணிக்குள் கொண்டு வந்துள்ளார் கவுதம் கம்பீர். அதேபோல் ஹர்திக் பாண்டியா மறுபக்கம் ரெட் பாலில் பவுலிங் பயிற்சியை தொடங்கி இருக்கிறார். முகமது ஷமியும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தயாராகிவிட்டால், இந்திய அணி முழுமையான பலத்துடன் ஆஸ்திரேலியா மண்ணில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த டெஸ்ட் தொடருக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.