மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வருவது ரசிகர்களை சோகம் அடைய வைத்திருக்கிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடிய நிலையில் மழை காரணமாக போட்டி பாதியிலே கைவிடப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது t20 போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துணை கேப்டன் கில் 5 ரன்களிலும், சஞ்சு சாம்சன் மூன்றாவது வீரராக களமிறங்கி வெறும் இரண்டு ரன்களிலும் ஆட்டம் இழந்தார்.

இதேபோன்று கேப்டன் சூரியகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், திலக் வர்மா டக்அவுட் ஆகியும் ஆட்டம் இழந்தார். எனினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் ஷர்மா அணியை தனியாக நின்று காப்பாற்றி இருந்தார். அப்போது நடுவரிசையில் விளையாடிய அக்சர் பட்டேல் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அப்போது அக்சர் பட்டேல் பந்துகளை எதிர்கொண்டு ரன்களை சேர்க்க தடுமாறினார். முக்கியமான கட்டத்தில் 12 பந்துகளில் 7 ரன்கள் எடுத்திருந்தபோது தேவையில்லாத ரன் அவுட்டில் பட்டேல் சிக்கினார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஏற்கனவே இரண்டு ரன்கள் ஓடி முடித்துவிட்டு தேவையில்லாமல் மூன்றாவது ரன் ஓட முயற்சி செய்தார் அக்சர் பட்டேல்.
அப்போது பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் இங்கிலீஷ் அழகாக ரன் அவுட் செய்தார். இது போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் அக்சர் பட்டேலின் இந்த கவனக் குறைவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜடேஜா இடத்தில் விளையாடும் அக்சர் பட்டேல் அவரை போல் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆனால் இதுபோல் தேவையில்லாத ரன் அவுட்டில் சிக்க கூடாது என்றும் ரசிகர்கள் குறை கூறியுள்ளனர்.